பிலிப்பீன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச் சூடு..!! 3 மாணவர்கள் உயிரிழப்பு.. 8 பேர் காயம்!
பிலிப்பீன்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 16 வயது மாணவரும் ஒருவர் ஆவார். அவர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
இந்தச் சம்பவம் மிண்டனாவ் (Mindanao) பகுதியில் உள்ள பங்கா நகரில் நடைபெற்றது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மேலும் 8 பேர் காயமடைந்தனர். அவர்களில் 4 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக பங்கா வட்டார மேயர் ஆல்பர்ட் பலன்சியா தெரிவித்தார்.
காயமடைந்த மற்றும் உயிரிழந்த அனைவரும் 14 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டை நடத்தப் போவதாக சந்தேக நபர் முன்கூட்டியே தனது நண்பர்களிடம் தெரிவித்திருந்ததாகவும், ஆனால் அவர்கள் அதை நம்பவில்லை என்றும் மேயர் கூறினார்.
இந்தச் சம்பவம் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிகள் குழந்தைகளின் கைகளுக்குச் செல்லாமல் தடுக்க பெற்றோர் மற்றும் சமூகத்தினர் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.