போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய ஹீரோக்கள்..!! இணையத்தில் குவியும் பாராட்டு..!!
சிங்கப்பூர்:செங்காங்கில் உள்ள ரிவர்வேல் கிரசென்ட் மற்றும் ரிவர்வேல் டிரைவ் சந்திப்பில், மழை காரணமாக போக்குவரத்து விளக்குகள் பழுதடைந்த சம்பவம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. இரவு நேரம் என்பதால் விபத்து அபாயம் அதிகரிக்கும் வாய்ப்பு இருந்தது.
இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (06.02.26)மாலை நடைபெற்றதாக கூறப்படுகிறது. போக்குவரத்து விளக்குகள் செயலிழந்ததால், வாகனங்கள் குழப்பமான முறையில் நகரத் தொடங்கின. இதை கவனித்த மூன்று பொதுமக்கள், தன்னிச்சையாக சாலையில் இறங்கி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
இந்த காட்சியை தனிஷா என்பவர் வீடியோவாக பதிவு செய்து டிக்டோக்கில் பகிர்ந்தார். இருட்டான சூழல், மழையால் நனைந்த சாலை ஆகியவற்றுக்கிடையே, மூன்று ஆண்கள் வாகனங்களுக்கு வழிகாட்டும் காட்சிகள் பலரையும் நெகிழ வைத்தன.
தனிஷாவின் கணவரும் அவரது சக ஊழியரும் போக்குவரத்து கட்டுப்பாடு தொடர்பான அறிவும் சான்றிதழும் கொண்டவர்கள் என்பதால், பாதுகாப்பாக செயல்பட முடிவு செய்ததாக அவர் தெரிவித்தார். விபத்துகளைத் தடுப்பதே அவர்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. அவர்கள் சுமார் 45 நிமிடங்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.இதற்கிடையில், நிலப் போக்குவரத்து ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பராமரிப்பு ஊழியர் வந்து போக்குவரத்து விளக்குகளை சரிசெய்தனர்.
போலீசார் வருவதற்கு முன் தன்னார்வமாக செயல்பட்ட இந்த மூன்று பொதுமக்களின் செயலை இணையவாசிகள் வெகுவாக பாராட்டினர். அவசர சூழ்நிலைகளில் சமூக பொறுப்புடன் செயல்படுவது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த சம்பவம் நினைவூட்டுகிறது.