சீனாவில் இந்த ஆண்டு நெருப்பு குதிரை ஆண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. சீன புத்தாண்டை முன்னிட்டு 7 நாள் அதிகாரப்பூர்வ விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆண்டு தோறும் நடைபெறும் உலகின் மிகப்பெரிய மனித இடம்பெயர்வு தொடர் இந்தாண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில் கோடிக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களை நோக்கி புறப்பட்டுள்ளனர்.
‘Chunyun’ என அழைக்கப்படும் இந்தப் பெரும் பயணக் காலத்தில், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள் அனைத்தும் மக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சிறப்பு ரயில்கள், கூடுதல் விமான சேவைகள், இரவு முழுவதும் இயங்கும் போக்குவரத்து ஏற்பாடுகள் ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளன.
சுமார் 1.4 பில்லியன் மக்கள் தொகை கொண்ட சீனாவில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்கள் சேர்த்து பல பில்லியன் பயணங்கள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலைக்காக நகரங்களில் தங்கி இருந்தவர்கள் பெரும்பாலும் தங்கள் கிராமங்களுக்கு திரும்பி குடும்ப உறவுகளை சந்தித்து வருகின்றனர்.
இந்தாண்டு பயண எண்ணிக்கை கடந்த ஆண்டை விட சுமார் 500 மில்லியன் அதிகரிக்கும் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். இது சீன பொருளாதார நடவடிக்கைகள் மீளுருவாக்கம் அடைந்திருப்பதற்கான அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது.
பண்டிகை கால உற்சாகம், குடும்ப ஒன்றுகூடல், கலாச்சார நிகழ்ச்சிகள், பாரம்பரிய உணவுகள் ஆகியவற்றால் நாடு முழுவதும் கொண்டாட்ட சூழல் நிலவுகிறது. உலகின் மிகப்பெரிய மக்கள் இடம்பெயர்வாகப் பெயர் பெற்ற இந்த சீன புத்தாண்டு பயணங்கள், ஒவ்வொரு ஆண்டும் புதிய சாதனையைப் படைத்து வருகிறது.