இலங்கை கடல் மாசுபாடு விவகாரத்தின் தற்போதைய நிலை என்ன..??
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட ‘எக்ஸ்-பிரஸ் பேர்ல்’ என்ற சரக்குக் கப்பல் ‘ ஒன்று ஜூன் 2021-ல் கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே தீப்பிடித்து இரண்டு வாரம் எரிந்து மூழ்கியது.
இதில் 81 ஆபத்தான பொருட்கள் மற்றும் நூற்றுக்கணக்கான டன் பிளாஸ்டிக் துகள் பரவியதால் வரலாறு காணாத மிக மோசமான கடல் மாசுபாடு ஏற்பட்டது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடையும் விதிக்கப்பட்டது.
இதனால் இலங்கை உச்ச நீதிமன்றம் ஜூலை 2025ல் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீட்டை உத்தரவிட்டது. இந்தத் தொகையை 4 கட்டங்களாக செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டது. மேலும் முதல் கட்டமாக 250 மில்லியன் டாலர் 23 செப்டம்பர் 2025க்குள் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டது.
எனினும், கப்பலின் உள்ளூர் முகவர் Sea Consortium Lanka (Pvt) Ltd. நிதி சிக்கலினால், முதல் கட்டமாக 1 மில்லியன் அமெரிக்க டாலர் (300 மில்லியன் இலங்கை ரூபாய்) மட்டுமே செலுத்த முடிவெடுத்துள்ளது. இது “நல்லெண்ணத்துடன்” செலுத்தப்பட்டதாகவும், முழு இழப்பீட்டை செலுத்துவதற்கான நிதி திறன் இல்லாததால் இது ஒரு குறியீட்டு தொகையாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
X-Press Feeders நிறுவனம், கப்பலின் முன்னாள் இயக்குனர், இந்த உத்தரவை ஏற்க மறுத்து, இது சர்வதேச கடல் சட்டங்களுடன் ஒத்துப்போகாதது என்றும், இதனால் எதிர்காலத்தில் கடல் விபத்துக்களுக்கு மிகப்பெரிய நிபந்தனைகள் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது. அவர்கள் இதுவரை 170 மில்லியன் டாலர் செலவழித்துள்ளதாகவும், மேலும் செலுத்துவதற்கு முன் இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் இலங்கையின் கடல் சூழலியல் மற்றும் மீன்பிடிப்பு சமூகங்களுக்கு மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.