சிங்கப்பூர்: சிங்கப்பூர் மற்றும் வெளிநாட்டு சட்ட நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்புத் திட்டங்களுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், நீதி அமைச்சகம் இன்று முதல் பொதுமக்களின் கருத்துகளை பெறும் ஆலோசனை நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
சட்ட சேவைகள் துறையின் வளர்ச்சியும், நாட்டின் எதிர்கால தேவைகளும் கருத்தில் கொண்டு, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சட்ட நிறுவனங்களுக்கிடையிலான கூட்டாண்மைக் கட்டமைப்பை மதிப்பாய்வு செய்ய, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மறுஆய்வுக் குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழு தனது மதிப்பாய்வை முடித்து, நான்கு முக்கிய துறைகளில் 10 பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அவை கூட்டு ஏற்பாடுகளுக்கான அளவுகோல்கள், உள்ளூர் சட்ட நிறுவனங்களில் நலன்களை வைத்திருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் தகுதிவாய்ந்த வெளிநாட்டு வழக்கறிஞர்களுக்கான தேவைகள், வெளிநாட்டு சட்ட நிறுவனங்களின் அமைப்பு மற்றும் அவர்கள் நடைமுறைப்படுத்தக்கூடிய சட்டப் பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்குகின்றன.
பொதுமக்களின் கருத்துகளை பெறும் இந்தப் பேச்சுவார்த்தை டிசம்பர் 10 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.