சிங்கப்பூர்:சிங்கப்பூரின் கேலாங் வட்டாரத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளை ஒழிக்க, பல அரசுத் துறைகள் இணைந்து கூட்டுச் சோதனை நடத்தியது.
இந்த நடவடிக்கையில் பிடோக் வட்டாரக் காவல்துறையுடன் குற்றப் புலனாய்வுத் துறை, குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையம், சுங்கத்துறை, சுகாதார அறிவியல் ஆணையம், நிலப் போக்குவரத்து ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்றன.
இந்தச் சோதனையில் மொத்தம் 43 பேர் சிக்கினர். அவர்களில் 13 பேர் ஆண்கள், 30 பேர் பெண்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் 22 முதல் 74 வயதுக்குட்பட்டவர்கள்.
கேலாங் பகுதியில் உள்ள 6 ஹோட்டல்களில் சோதனை நடத்தப்பட்டது.போதைப்பொருள் குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டனர். காவல்துறையிடமிருந்து தப்பிக்க முயன்ற 50 வயது ஆடவர் ஒருவரும் பிடிபட்டார்.
உபி ரோட்டில் நடந்த தனிப்பட்ட சோதனையில் இணையவழி சூதாட்டம் முறியடிக்கப்பட்டு, 6 ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் S$4,000க்கும் அதிகமான ரொக்கம் மற்றும் சூதாட்ட கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையில், கேலாங் பகுதியில் பாலியல் குற்றங்கள்,பதிவு செய்யப்படாத சுகாதாரப் பொருள்கள்,Etomidate கலந்த மின்-சிகரெட்டுகள், தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.இதன் மொத்த மதிப்பு சுமார் S$16,000 வெள்ளி எனத் தெரிவிக்கப்பட்டது.
முறையான அனுமதி இன்றி வேலை செய்த அந்நிய நாட்டவர்கள் மற்றும் அவர்களை வேலைக்கு வைத்தவர்களும் சிக்கினர். சட்டத்தை மீறும் எவராக இருந்தாலும் கடும் நடவடிக்கை தொடரும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.