ஓடும் பேருந்தில் புகைபிடித்த நபர்..!!HSA எடுத்த கடும் நடவடிக்கை..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொது பேருந்தில் இ-சிகரெட்டை புகைத்த நபர் ஒருவர் பிடிபட்ட சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பேருந்து ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் நின்றபடியே இ-சிகரெட்டை புகைத்ததுடன், அந்த இடத்தில் செல்ஃபியும் எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதற்கான காணொளி இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) மேற்கொண்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அந்த நபரின் வீட்டில் சோதனை நடத்திய போது, நான்கு இ-சிகரெட்டுகள் மற்றும் 12 இ-சிகரெட் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை (03.02.26) வெளியிடப்பட்ட ஒரு குறுகிய இன்ஸ்டாகிராம் பதிவில், 21 வயது இளைஞரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர் தற்போது விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்து வருவதாகவும் HSA தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் பொது இடங்களில் இ-சிகரெட் பயன்பாடு தொடர்பான சட்டங்களை மீண்டும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.
இதற்கு முன், கடந்த வெள்ளிக்கிழமை (30.01.26) Sgfollowsall என்ற சமூக ஊடக கணக்கில் பதிவேற்றப்பட்ட காணொளி ஒன்றில், ஓடும் பேருந்தில் பயணியின் அருகில் நின்றபடி இ-சிகரெட்டை புகைத்துக் கொண்டிருந்த நபரின் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அந்த வீடியோ குறுகிய நேரத்தில் பெரும் கவனம் பெற்றது.
வீடியோவை பதிவேற்றிய பயனர், சம்பவம் நடந்த தேதி மற்றும் நேரத்தை குறிப்பிடவில்லை. இருப்பினும், தொழில்நுட்பக் கல்வி மேற்குக் கல்லூரியிலிருந்து பயனீர் பகுதியை நோக்கிச் சென்ற எண் 974 பேருந்தில் இந்த சம்பவம் நடந்ததாக மட்டும் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் பொது போக்குவரத்து வாகனங்களில் இ-சிகரெட் பயன்பாடு கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இத்தகைய செயல்கள் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை பாதிக்கும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.