குழந்தைகளின் டிஜிட்டல் பழக்க வழக்கத்திற்கு அரசின் புதிய திட்டம்..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூர் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் (IMDA) பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான டிஜிட்டல் பயன்பாட்டுப் பழக்கங்களை வளர்த்துக் கொடுக்க உதவும் வகையில் புதிய வளங்களை அறிமுகப்படுத்தி நான்கு முக்கிய பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.
IMDA வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள நான்கு பரிந்துரைகள்: ஆன்லைனில் எல்லைகளை நிர்ணயித்தல், செயல்படுவதற்கு முன் சிந்தித்தல், பொருத்தமற்ற உள்ளடக்கத்தைப் புகாரளித்தல், மேலும் குழந்தையின் ஆன்லைன் பயணத்தில் அவர்களை ஈடுபடுத்தி ஆதரித்தல் ஆகியவையாகும்.
இந்த பரிந்துரைகள் குழந்தைகள் சிறுவயதிலிருந்தே ஆரோக்கியமான டிஜிட்டல் பழக்கங்களை உருவாக்க உதவும் அடித்தளமாக அமையும் என்றும், அவர்கள் விவேகமுள்ள மற்றும் பொறுப்பான இணைய பயனர்களாக வளர வழிவகுக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், இன்ஃபோகாம் மீடியா கவுன்சில் ‘டிஜிட்டல் ஃபார் லைஃப்’ போர்ட்டலில் குறுகிய வீடியோக்கள், தகவல் கிராஃபிக்கள், ஊடாடும் கருவிகள் மற்றும் விளையாட்டுகளை வெளியிடுகிறது.
மேலும், உள்ளடக்க வடிகட்டல், தனியுரிமை அமைப்புகள், புகாரளிக்கும் கருவிகள் மற்றும் பாதுகாப்பான இணையப் பயன்பாடு குறித்து பெற்றோர்களுக்கு வழிகாட்டும் ‘சைபர் பாதுகாப்பு டிஜிட்டல் வளத் தொகுப்பு’ ஒன்றை உருவாக்கும் பணியில், அதிகாரிகள் பல தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகின்றனர்.
அரசாங்கம், குடும்பங்கள், பள்ளிகள், சுகாதார நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளுடன் இணைந்து, குழந்தைகள் டிஜிட்டல் உலகில் ஆரோக்கியமாகவும் நம்பிக்கையுடனும் வளர்ந்து, அறிவும் பொறுப்பும் உடைய இணையப் பயனர்களாக உருவாக தொடர்ந்து பணியாற்றும் என IMDA தெரிவித்துள்ளது.