சிங்கப்பூரில் 4 வார அமலாக்க நடவடிக்கையில் பிடிபட்ட 546 பேர்..!! காரணம்..??
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நவம்பர் 22 முதல் டிசம்பர் 20 வரை நடத்தப்பட்ட நான்கு வார கூட்டு அமலாக்க நடவடிக்கையின் போது, 15 முதல் 88 வயதுக்குட்பட்ட 1,700க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, 546 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையில் ஏழு காவல் பிரிவுகள், போக்குவரத்து காவல்துறை, குற்றப் புலனாய்வுத் துறை உள்ளிட்ட பல அரசு அமைப்புகள் இணைந்து செயல்பட்டதாக சிங்கப்பூர் காவல் படை தெரிவித்துள்ளது.
இந்த சோதனைகளில் சட்டவிரோத மசாஜ் நிலையங்கள், விபச்சாரம், குடிவரவு சட்ட மீறல்கள், சட்டவிரோத சூதாட்டம், போதைப்பொருள் குற்றங்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் ஆகியவை கண்டறியப்பட்டன.
உரிமம் இல்லாமல் செயல்பட்ட மசாஜ் நிலையங்கள் உட்பட ஐந்து மசாஜ் பார்லர்கள் விசாரணையில் உள்ளன. பெண்கள் சாசனம், வெளிநாட்டு தொழிலாளர் வேலைவாய்ப்புச் சட்டம் மற்றும் குடிவரவுச் சட்டங்களை மீறியதாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத சூதாட்டம் தொடர்பாக பல பகுதிகளில் தனித்தனியாக நடத்தப்பட்ட சோதனைகளில் மூத்த குடிமக்கள் உட்பட பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த நடவடிக்கைகளின் போது பல்லாயிரக் கணக்கான டாலர்கள் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 12 பேர் கைது செய்யப்பட்டனர். மின்-சிகரெட் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வைத்திருந்ததாகவும் பலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
போக்குவரத்து காவல்துறை மேற்கொண்ட சோதனைகளில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். உரிமம் இல்லாமல் அல்லது காப்பீடு இன்றி வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கார் பகிர்வு சேவைகளை தவறாக பயன்படுத்திய சம்பவங்களும் கண்டறியப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த நடவடிக்கைகளின் நோக்கம் என்றும், சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் சிங்கப்பூர் காவல் படை தெரிவித்துள்ளது.