AMC 8 கணிதத் தேர்வில் சர்ச்சை..!! என்ன நடந்தது..??
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் AMC 8 கணிதத் தேர்வில் கேள்விகள் கசிந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும், பெரும்பாலான மாணவர்களும் ஆசிரியர்களும் நேர்மையுடன் இந்தத் தேர்வில் பங்கேற்றதாக அமெரிக்க கணிதப் போட்டிகள் (AMC) ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில், சீன மின்வணிக தளங்களில் சில விற்பனையாளர்கள் AMC 8 தேர்வின் முதல் நாளிலேயே கேள்விகள் மற்றும் பதில்களை விற்றதாக சந்தேகம் எழுந்தது. இந்தத் தேர்வு உலகளவில் நடைபெறுவதால், நேர மண்டல வேறுபாடுகள் காரணமாக அமெரிக்கா மற்றும் கனடாவில் ஜனவரி 22 முதல் 28 வரை, பிற நாடுகளில் ஜனவரி 23 முதல் 29 வரை தேர்வு நடத்தப்படுகிறது.இதுவே கசிவு குற்றச்சாட்டுகளுக்குக் காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது
இதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க கணித சங்கத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்பு இயக்குனர் கிறிஸ்டின் மோரிஸ், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் பங்கேற்பை அதிகரிக்க ஒரு வார கால அட்டவணையில் இந்தப் போட்டி நடத்தப்படுவதாக விளக்கினார். பெரும்பாலான மாணவர்களும் கல்வியாளர்களும் நேர்மையுடன் பங்கேற்று, கற்றல் மற்றும் சிக்கல் தீர்க்கும் நோக்கத்தை மதிப்புடன் பேணியதாகவும் அவர் தெரிவித்தார்.
AMC 8 என்பது தேசிய அல்லது சர்வதேச திறமைத் தேர்வு கருவியாக வடிவமைக்கப்படவில்லை என்றும், இதன் மதிப்பெண்கள் கல்வி சேர்க்கை அல்லது வேலைவாய்ப்பு முடிவுகளுக்கான ஒரே அளவுகோலாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் அமெரிக்க கணித சங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. போட்டியின் கல்வி மதிப்பையும் நிர்வாகத் தரத்தையும் பாதுகாப்பதற்காக அங்கீகாரம் பெற்ற கூட்டாளர்களுடன் தொடர்ந்து பணியாற்றப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் தேர்வு மையத்தின் தலைவர் சூ சியுபிங், சமூக ஊடகங்களும் தொழில்நுட்பமும் வளர்ந்துள்ள இன்றைய காலத்தில், நேர்மை கல்வியின் முக்கிய அடிப்படை மதிப்பாகும் என்பதை மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் நினைவூட்ட வேண்டிய தருணம் இதுவென தெரிவித்தார். முன்னதாக, சில கேள்விகள் மாற்றியமைக்கப்படலாம் என்றும், இது இந்த வாரம் தேர்வெழுதிய 369 மாணவர்களை பாதிக்கக்கூடும் என்றும் உள்ளூர் அமைப்பாளர்கள் கூறியிருந்தனர்.