கணவனை படுக்கையறைக்குள் நுழைய தடை விதித்த நீதிமன்றம்..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில்,கணவரால் பாலியல் உறவில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டதாகப் புகார் அளித்த ஒரு பெண்ணுக்கு,குடும்ப சட்ட நீதிமன்றம் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தரவை வழங்கியுள்ளது. கணவர் பிரதான படுக்கையறைக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டதுடன், வீட்டை விட்டு வெளியேறவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோது, பாலியல் உறவு சம்மதத்துடன் நடந்ததாகக் கணவர் வலியுறுத்தினார். ஆனால், பெண் அளித்த விளக்கம் நம்பகமானதாகவும், சம்பவத்துக்குப் பிந்தைய நடவடிக்கைகள் அவளது கூற்றை உறுதிப்படுத்துவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
சம்பவத்தன்று, மனஅழுத்தம் மற்றும் உடல் சோர்வால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கணவர் அவளது வேண்டுகோள்களை மீறி கட்டாயமாக பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இது வீட்டு வன்முறையின் ஒரு வடிவம் என்றும், பெண்ணுக்கு கடுமையான மன மற்றும் உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்தியதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.
பெண்ணின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, நீதிமன்றம் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தரவை பிறப்பித்ததுடன், இரு தரப்பினரும் திருமண ஆலோசனைக்கு உட்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மற்ற கோரிக்கைகள் தொடர்பாக போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதால் அவை நிராகரிக்கப்பட்டன.