சிங்கப்பூரில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து..!! லோயாங் அவென்யூவில் 31 வயது ஓட்டுநர் கைது..!!

சிங்கப்பூரில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து..!! லோயாங் அவென்யூவில் 31 வயது ஓட்டுநர் கைது..!!

சிங்கப்பூர் :லோயாங் அவென்யூவில் இரண்டு கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட பயங்கர சாலை விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில் 31 வயது கார் ஓட்டுநர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகச் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

லோயாங் அவென்யூவில் இரண்டு கார்களும் ஒரு மோட்டார் சைக்கிளும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியது.  

விபத்தில் சிக்கிய கார்களில் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த மண்மேட்டின் மீது ஏறி விலகிச் சென்றுள்ளது.

அது அங்கிருந்த ஒரு தற்காலிக பேருந்து நிறுத்தத்தின் பாதுகாப்புத் தடுப்புக் கம்பங்கள் மீது பலமாக  மோதியது.

இந்த விபத்தில் காயமடைந்த  இருவர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

உள்ளூர் சாலை விபத்துகளைப் பதிவு செய்யும் SGRV ஃபேஸ்புக் பக்கத்தை வெளியான காணொளியின்படி, விபத்துக்குள்ளான கருப்பு நிறக் கார் தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் பக்கவாட்டில் தலைகீழாகக் கவிழ்ந்து கிடந்தது.

காரின் முன்பகுதி முற்றிலும் நசுங்கி, அதன் பாகங்கள் சாலை எங்கும் சிதறி கிடந்துள்ளது.

விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த  காவல்துறையினர், முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் காரை ஒட்டி வந்த 31 வயது ஓட்டுநரை மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காகக் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் காவல்துறையினர் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு சில நொடிகளில் ஏற்பட்ட இந்த விபத்து, சாலையில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதால் ஏற்படக்கூடிய ஆபத்தை மீண்டும் உணர்த்தியுள்ளது. குறிப்பாக மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டுவது ஓட்டுநரின் உயிருக்கு மட்டுமின்றி, சாலையில் பயணிக்கும் மற்றவர்களின் உயிருக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். பாதுகாப்பான பயணத்திற்குப் பொறுப்புடன் வாகனம் ஓட்டுவது ஒவ்வொருவரின் கடமையாகும்.