சுகாதாரம் முதல் ஓய்வூதியம் வரை – 2026ல் என்னென்ன மாறுகிறது..?
சிங்கப்பூர்:புத்தாண்டு நாளை பிறக்கவுள்ள நிலையில், சிங்கப்பூரில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும் பல புதிய கொள்கைகள் மற்றும் திருத்தங்கள் அமலுக்கு வர உள்ளன.மருத்துவப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய சேமிப்பு போன்ற முக்கிய துறைகளில் ஏற்படும் இந்த மாற்றங்கள்,செலவுகளை கட்டுப்படுத்தவும், நீண்டகால பாதுகாப்பை வலுப்படுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
சுகாதாரத் துறையில், 2026 ஏப்ரல் 1 முதல் ஒருங்கிணைந்த கேடயத் திட்டங்களுக்கான (Integrated Shield Plans) துணை காப்பீடுகளில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இனி குறைந்தபட்ச விலக்குகள் வழங்கப்படாது; அதே நேரத்தில் இணை-கட்டண வரம்பு இரட்டிப்பாக்கப்படும். இந்த நடவடிக்கை தேவையற்ற சிகிச்சைகளை குறைத்து, சுகாதாரச் செலவுகளில் பொறுப்புணர்வை உருவாக்குவதே இலக்காகக் கொண்டுள்ளது.
மேலும், CareShield Life திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பயன்தொகையின் வருடாந்திர வளர்ச்சி விகிதம், 2026 ஜனவரியில் இருந்து 2 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் நீண்டகால பராமரிப்பு தேவைகளுக்கு கூடுதல் ஆதரவு கிடைக்கும். அதே நேரத்தில்,உயர்ந்த பிரீமியங்களால் பாதிக்கப்படும் பாலிசிதாரர்களுக்கு உதவ அரசாங்கம் கூடுதலாக S$570 மில்லியன் தொகையை ஒதுக்கியுள்ளது.
ஓய்வூதிய சேமிப்பில், CPF அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் வர உள்ளன. 2026 ஜனவரிக்குள் CPF பங்களிப்புகளுக்கான மாதாந்திர சம்பள வரம்பு S$8,000 வெள்ளியாக உயர்த்தப்படும். இதன் மூலம் அதிக வருமானம் பெறுவோரின் ஓய்வூதிய சேமிப்பு அதிகரிக்க வாய்ப்பு கிடைக்கும். மேலும், 55 முதல் 65 வயதுடைய நடுத்தர மற்றும் மூத்த ஊழியர்களுக்கான CPF பங்களிப்பு விகிதம் 1.5 சதவீத புள்ளிகளால் உயர்த்தப்பட உள்ளது.
இந்த மாற்றங்கள் அனைத்தும்,சிங்கப்பூரில் வாழும் மக்களின் எதிர்கால பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நீண்டகால சமூக நிலைத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கத்தை கொண்டுள்ளன.