HDB குடியிருப்பில் நடந்த எதிர்பாராத சம்பவம்..!! குடியிருப்பாளர்கள் அதிர்ச்சி..!!
சிங்கப்பூர்: புவாங்கோக் கிரசென்ட்டில் உள்ள HDB குடியிருப்புக் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் குடியிருப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குடியிருப்பாளர் ஒருவர் சமையலறையில் சமைத்துவிட்ட அடுப்பை அணைக்க மறந்துள்ளார். பின்பு அவர் வீட்டை விட்டு வெளியேறியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதிர்ஷ்டவசமாக அந்த வீட்டின் அருகில் வசித்தவர்கள் அந்த சலசலப்பை கவனித்து காவல்துறைக்கு அழைப்பு விடுத்து தகவல் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்தானது ஜூன் 17ஆம் தேதி அன்று நிகழ்ந்துள்ளது. இது குறித்து ஆங் மோ கியோ GRC நாடாளுமன்ற உறுப்பினர் லாய் தியாம் ஃபாட் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அடுப்பில் ஒரு பாத்திரம் சூடேறிக் கொண்டிருப்பதை மறந்து குடியிருப்பாளர் சமைக்கும் போது வீட்டை விட்டு வெளியேறியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்பதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினர் (SCDF) சமையலறையில் ஏற்பட்ட தீயை விரைவாக அணைத்ததாகவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்தபோது உள்ளே ஏராளமான ஆடைகளும் தலபாடங்களும் குவிக்கப்பட்டிருப்பதை கண்டதாகவும், இது ஒரு பெரிய தீ விபத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும் மேலும் அருகில் உள்ளவர்களும் பாதிப்படைந்திருப்பார்கள் எனவும் அவர் பதிவிட்டிருந்தார்.
வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியம் (HDB) , நகர மன்ற ஊழியர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோரின் உடனடி உதவிக்காகவும் லாய் நன்றி தெரிவித்துள்ளார்.
குடியிருப்பாளர்கள் தங்களது வீடுகளில் உள்ள தேவையற்ற பொருள்கள் மற்றும் தீ விபத்து அபாயங்கள் குறித்து தவறாமல் சரி பார்க்க வேண்டும் எனவும்,; ஒருவருக்கொருவர் அருகில் உள்ளவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் எனவும் குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.