சிங்கப்பூரில் S$1.7 மில்லியனுக்கு விற்பனையான வீடு..!! எங்கு தெரியுமா..??
சிங்கப்பூர்: குயின்ஸ்டவுனில் உள்ள ஸ்கைடெரஸ்@டாசன் திட்டத்தில் ஐந்து அறைகள் கொண்ட மேல் மாடி (பென்ட்ஹவுஸ்) வீடு S$1.7 மில்லியனுக்கு விற்கப்பட்டு, மறுவிற்பனை சந்தையில் புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இது இதுவரை விற்பனையான மிக உயர்ந்த விலையுடைய மறுவிற்பனை குடியிருப்பாகும்.
மறுவிற்பனை விலை விவரங்களின்படி, இந்த உயர்தர அடுக்குமாடி குடியிருப்பு டாசன் சாலையில் உள்ள 92ஆம் கட்டிடத்தின் 19 முதல் 21ஆம் தளங்களில் அமைந்துள்ளது. 122 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த வீடு, இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தில் கைக்கு மாறியுள்ளது.இந்த அலகுக்கு இன்னும் 89 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்கள் குத்தகைக் காலம் மீதமுள்ளது.
டாசன் பகுதியில் மில்லியன் டாலர் மதிப்பில் வீடுகள் விற்பனையாகுவது இது முதல் முறை அல்ல. ரியல் எஸ்டேட் இணையதளமான ‘99.கோ’ தெரிவித்ததாவது, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இதேபோன்ற ஐந்து அறைகள் கொண்ட மேல் மாடி வீடு S$1.66 மில்லியனுக்கு விற்பனையாகி, குறுகிய கால தேசிய சாதனையைப் பெற்றிருந்தது.
மற்றொரு ரியல் எஸ்டேட் இணையதளமான ‘EdgeProp’ கூறுவதாவது, டாசன் பகுதியில் தொடர்ந்து அதிக விலைகள் நிலவுவதற்கு அதன் பிரதான இருப்பிடம் மற்றும் நீண்டகால குத்தகை முக்கிய காரணமாக இருக்கலாம். நகர மையத்துக்கு அருகில் அமைந்துள்ளதுடன், போக்குவரத்து மற்றும் பிற வசதிகளும் இப்பகுதியின் மதிப்பை உயர்த்துகின்றன.
மேலும், இந்த திட்டம் குயின்ஸ்டவுன் தொடக்கப்பள்ளி, கிரசண்ட் மகளிர் பள்ளி மற்றும் குயின்ஸ்டவுன் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களுக்கு ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் அமைந்துள்ளது. இதனால் குடும்பங்களுக்கு இது மிகவும் கவர்ச்சிகரமான தேர்வாக மாறியுள்ளது.
அதே பகுதியில் உள்ள ஸ்கைஓயாசிஸ்@டாசன் திட்டத்திலும் கடந்த ஆண்டு ஐந்து அறைகள் கொண்ட ஒரு அலகு சுமார் S$1.73 மில்லியனுக்கு விற்பனையாகியதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், அந்த பரிவர்த்தனை HDB-யின் அதிகாரப்பூர்வ மறுவிற்பனை தரவுகளில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.