வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி...!!SOTA தளத்தை பாதித்தது தாக்குதலா...?? பாதுகாப்பா..??
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் கலைப் பள்ளியான சிங்கப்பூர் கலை அகாடமியின் (SOTA) பெற்றோர் தளம் தற்காலிகமாக செயலிழந்தது குறித்து கல்வி அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
தளத்தின் முடக்கத்திற்கு சைபர் தாக்குதல் காரணம் இல்லை. மேலும் அவை பாதுகாப்பு மேம்பாட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே நடைபெற்றதாக அமைச்சகம் கூறியுள்ளது.
மூன்றாம் தரப்பு சேவையகத்தில் ஏற்பட்ட சாத்தியமான பாதிப்பு காரணமாக SOTA தன்னுடைய பெற்றோர் தளத்தின் செயல்பாட்டை இடைநிறுத்தியதாக முன்பு தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து, சைபர் தாக்குதல் ஏற்பட்டதாக பரவும் வதந்திகளை மறுக்கும் வகையில், கல்வி அமைச்சகம் ஜூலை 23ஆம் தேதி இரவு தனது அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது.
அந்த அறிக்கையில், மைக்ரோசாஃப்ட் ஷேர்பாயிண்ட் சேவையகங்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க, பள்ளிகள் தங்கள் நிர்வாக அமைப்புகளில் உடனடியாக பாதுகாப்பு இணைப்புகளை நிறுவ வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.
இதுவரை எந்த ஊடுருவல் சம்பவத்திற்கும் ஆதாரம் இல்லை என்றும் கூறப்பட்டது.
அதேபோல், சிங்கப்பூர் கலை அகாடமியும் தனித்த அறிக்கையொன்றை வெளியிட்டு, தங்கள் அமைப்பில் எந்தவிதமான சைபர் ஊடுருவலும் பதிவாகவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
கல்வி அமைச்சின் ஆலோசனையைப் பின்பற்றி,பெற்றோர் தளத்தினை இணையத்திலிருந்து தற்காலிகமாக துண்டித்தது பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாகவே மேற்கொள்ளப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.