இ-சிகரெட்டு மோகம்...!!! இணையத்தில் வைரலாகும் எச்சரிக்கை பதிவு..!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் இ-சிகரெட்டுகளின் தவறான பயன்பாடு அதிவேகமாக பரவிவருகிறது. குறிப்பாக “ஜாம்பி சிகரெட்டுகள்” என்று அழைக்கப்படும், எட்டோமைடேட் என்ற ஆபத்தான மருந்து கலந்த மாடல்கள் இளைஞர்களிடையே தீவிரமாக பரவியுள்ளன.
சுகாதார அமைச்சர் ஓங் யே குங் தெரிவித்ததன்படி, சமீபத்திய தேடல்களில் கைப்பற்றப்பட்ட இ-சிகரெட்டுகளில் மூன்றில் ஒன்று இந்த வேதிப்பொருளைக் கொண்டிருந்தது. இது மாயத்தோற்றம், நரம்பியல் பாதிப்பு, மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது.
உள்ளூர் இறுதிச் சடங்கு நிறுவனமான ஆங் சின் மோ இறுதிச் சடங்கு இயக்குநர்கள் சமீபத்தில் இந்த விவகாரம் குறித்து தங்கள் கவலையை வெளிப்படுத்தும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டனர்.
பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட புகைப்படங்களின்படி,சடலங்களை ஏற்றிச்செல்லும் வாகனத்தின் பின்புறத்தில் “வேப்பிங் கொலைகள்-அதாவது நாங்கள் உங்களை அழைத்துச் செல்ல வேண்டும்!” என்ற ஒரு வாசகம் இடம் பெற்றிருந்தது.
ஜாம்பி சிகரெட்டுகளின் போக்கு சிங்கப்பூரில் மோசமாகி வருவதாகவும், சிங்கப்பூரில் இளைஞர்களின் உயிரைப் பறித்துள்ளதாகவும் வணிக உரிமையாளர் பதிவில் தெரிவித்துள்ளார்.
எனவே இது மாதிரியான எச்சரிக்கை பதிவு அதிகமான மக்களை சிந்திக்க வைக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
இ-சிகரெட்டின் ஆபத்துகளை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சகம், உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. எட்டோமைடேட்டை சட்டப்படி கட்டுப்படுத்தப்பட்ட மருந்தாக பட்டியலிடும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.