விபத்தில் சிக்கிய ஆயுதப்படை வீரர்..!!! என்ன நடந்தது..??
சிங்கப்பூர்:சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர் ஒருவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்து சாலையின் நடுவில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டார்.
அவர் தற்போது காவல்துறையினரின் விசாரணைக்கு உதவி வருகிறார்.
இந்த விபத்து இம்மாதம் 7ஆம் தேதி மாலை 6.05 மணியளவில், சிம்ஸ் அவென்யூ வெளியேறும் இடத்திற்கு முன்பாக, கேலாங் – பாயோ லெபார் விரைவுச்சாலை (KPE) யில் இருந்து தெம்பனிஸ் விரைவுச்சாலை (TPE) நோக்கி செல்லும் பகுதியில் நடந்தது.
SGRV FRONT MAN முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட புகைப்படங்களில், ஆயுதப்படை சீருடையில் ஒருவர் சாலையின் நடுவில் கிடப்பதையும் அருகில் அவரது மோட்டார் சைக்கிள், ஒரு லாரி மற்றும் இரண்டு கார்கள் இருப்பதையும் காட்டுகின்றன.
விபத்து நடந்த நேரத்தில் அந்த நபர் பாதைகளைக் கடந்து சென்றதாகவும், வாகனங்களுக்கிடையே சென்றதாகவும் அந்தப் பதிவு குறிப்பிட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாவது, ஆயுதப் படை வீரர் அன்று வீடு திரும்பும் வழியில் போக்குவரத்து விபத்தில் சிக்கியதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர் அந்த நேரத்தில் பணியில் இல்லாதவர் என்றும், தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.