சாலை விபத்துக்கள் பதிவிடப்படும் சமூக ஊடகப் பக்கமான SGRV தனது பேஸ்புக்கில் இந்த விபத்து குறித்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளது.
அந்த புகைப்படங்களில் விபத்திற்கு பிறகு மோட்டார் சைக்கிள் சாலையின் நடுவில் கவிழ்ந்து கிடப்பதும், முதியவர் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் தரையில் விழுந்து கிடப்பதும் தெரிகிறது. அவ்வழியே சென்ற பலர் அவர்களை பார்ப்பதும், மேலும் சில வாகனங்கள் சம்பவ இடத்தில் நிற்பதும் தெரிகிறது.
சம்பவத்திற்கு பிறகு நடந்த சில புகைப்படங்களும் பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது . அதில் மருத்துவ பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகள் மேற்கொள்வது போன்று உள்ளது.
இந்த விபத்து சம்பவம் குறித்த தகவலானது சிங்கப்பூர் காவல் படை மற்றும் சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினருக்கு (SCDF) தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பர் கிராஸ் தெருவில் இருந்து யூ டோங் சென் தெருவை நோக்கிச் செல்லும் ஒரு சந்திப்பில் விபத்து நிகழ்ந்ததாக கிடைத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து வந்தனர். அங்கு காயமடைந்து சுயநினைவுடன் இருந்த 86 வயது முதியவரை சிகிச்சைக்காக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதில் சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காவல்துறையின் விசாரணைக்கு உதவி வருவதாகவும், மேலும் இந்த விபத்து குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.