சிங்கப்பூரில் இலவச பேருந்து சேவை நிறுத்தப்பட்டதா..?
சிங்கப்பூர்:மெரினா பே பகுதியில் இயங்கிவந்த இலவச இடைவெளி பேருந்து சேவையின் குத்தகை நீட்டிக்கப்படாது என்று அதை தொடங்கிய அடித்தள அமைப்புகள் அறிவித்துள்ளன.
இந்த முடிவு, அண்மையில் நடைபெற்ற மறு ஆய்வு மற்றும் கருத்து கணிப்பு முடிவுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இலவச பேருந்து சேவை 2024 ஜூலை மாதத்தில் “மெட் பிளஸ் – மவுண்ட் பேட்டன்” குடியிருப்பாளர்களுக்காக ஒரு ஓராண்டு முன்னோடி (Pilot) திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் முக்கிய நோக்கம், மெரினா பே மற்றும் அதன் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு இடையே வசதியான போக்குவரத்தை ஏற்படுத்தி, குடியிருப்பாளர்களுக்கு குறுகிய தூரப் பயண வசதியை வழங்குவதாகும்.
அண்மையில் நடைபெற்ற மறு ஆய்வு திட்டத்தில் திரட்டப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள், பயணிகள் பயன்பாடு, செலவு, வளங்களின் பயனுள்ள பயன்பாடு போன்ற அம்சங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டன. அதன் பின்னர், இந்த சேவையின் குத்தகையை நீட்டிக்க வேண்டாம் என்று தீர்மானிக்கப்பட்டது.
அடித்தள அமைப்புகள் வெளியிட்ட Facebook பதிவில், “வளங்களை இனிமேல் சமூக மேம்பாட்டு முயற்சிகளில் திறம்படப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், இத்திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட மனிதவளம் மற்றும் நிதி வளங்கள், சமூக நலனுக்கான பிற திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் சேவையின் ஆரம்ப நோக்கம் நிறைவேறியுள்ளது. மெரினா பே மற்றும் மவுண்ட் பேட்டன் பகுதிகளில் வசிக்கும் மக்கள், தற்போது MRT மற்றும் பொதுப் பேருந்து சேவைகளைப் பயன்படுத்தி வருவதால், சேவையின் தொடர்ச்சி தேவையில்லை என அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.