உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த சிங்கப்பூர் எடுத்த முக்கிய நடவடிக்கை..!!
சிங்கப்பூர்:சீன அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில், சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் வெள்ளை அரிசி ஏற்றுமதி குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கிடையேயான முதல் வெள்ளை அரிசி வர்த்தக ஒத்துழைப்பு ஒப்பந்தமாகும்.
APEC தலைவர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக, சிங்கப்பூரின் நிலையான வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஃபூ ஹையான் மற்றும் வியட்நாமின் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் நுயென் ஹாங் டியென் ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், சிங்கப்பூர் தேவைக்கேற்ப கோரிக்கை விடுக்கும் போது, ஒப்புக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி வியட்நாம் வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்யும்.
வெள்ளை அரிசி வர்த்தக ஒத்துழைப்பு குறித்து சிங்கப்பூர் கையெழுத்திட்ட முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் இதுவாகும் என அமைச்சர் ஃபூ ஹையான் தெரிவித்தார். மேலும், வியட்நாம் சிங்கப்பூரின் மிகப்பெரிய வெள்ளை அரிசி சப்ளையர்களில் ஒன்றாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் தனது உணவில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டவற்றை இறக்குமதி செய்கிறது. இதனால், உலகளாவிய உணவு விநியோக தடைகள் உருவாகும் போது சவால்களை சந்திக்க நேரிடும் என்று ஃபூ ஹையான் கூறினார்.
எனவே, உலக நாடுகள் மற்றும் பிராந்தியங்களுடன் வலுவான கூட்டாண்மைகளை உருவாக்குவது, நாட்டில் வெள்ளை அரிசி போன்ற அடிப்படை உணவுப் பொருட்களின் நிலையான விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கு முக்கியமானது என அவர் வலியுறுத்தினார்.