சிங்கப்பூரில் லாரி திருட்டு..! ஊழியர்களை தள்ளிவிட்டு லாரியை ஓட்டிச் சென்ற 59 வயது நபர் கைது..!!

சிங்கப்பூரில் லாரி திருட்டு..! ஊழியர்களை தள்ளிவிட்டு லாரியை ஓட்டிச் சென்ற 59 வயது நபர் கைது..!!

சிங்கப்பூர்: ஜாலான் புக்கிட் மேரா பகுதியில் ஊழியர்கள் லாரியில் இருந்து பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தபோது, லாரியை திருடிச் சென்றதாகக் கூறப்படும் 59 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) மாலை சுமார் 7.15 மணியளவில் ஜாலான் புக்கிட் மேரா பகுதியில் லாரி திருடப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.


முதற்கட்ட விசாரணையின்படி, லாரி உரிமையாளரும் ஊழியர்களும் அப்பகுதியில் லாரியில் இருந்து பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், லாரி தனது பாதையை மறிப்பதாகக் கூறியுள்ளார்.


இதையடுத்து அந்த நபர் திடீரென லாரியில் ஏறி அதை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவரைத் தடுக்க முயன்ற ஊழியர் ஒருவரை அந்த நபர் கீழே தள்ளியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மத்திய காவல் பிரிவு அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர். காவல்துறை கேமரா காட்சிகள் உள்ளிட்டவற்றின் உதவியுடன் சந்தேக நபரின் அடையாளம் கண்டறியப்பட்டது.

புகார் கிடைத்த 6 மணி நேரத்திற்குள் 59 வயது நபர் கைது செய்யப்பட்டார். திருடப்பட்ட லாரியும் பின்னர் மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர் நேற்று (ஆகஸ்ட் 22) வாகனத் திருட்டு குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

பொதுமக்களின் பொருட்களையும் வாகனங்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியம் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது. சட்டத்தை மீறி வெளிப்படையாக திருட்டில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.