போக்குவரத்து சிக்னல்களை மாற்றும் புதிய ஆம்புலன்ஸ் தொழில்நுட்பம்..!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அவசர மருத்துவ சேவைகளை மேலும் வேகமாகவும் திறமையாகவும் மாற்றும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் முன்னுரிமை அமைப்பு தற்போது அதன் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டங்களுக்குள் நுழைந்துள்ளது.
இந்த அமைப்பு செயல்படுத்தப்பட்டதன் மூலம், ஒரு அவசர மருத்துவப் பயணத்திற்கு சராசரியாக இரண்டு நிமிடங்கள் வரை நேரம் மிச்சப்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் தகவலின்படி, இந்த அமைப்பு முதன்முதலில் ஜூலை 2024 இல் Ng Teng Fong பொது மருத்துவமனைக்கு அருகிலுள்ள போக்குவரத்து சந்திப்புகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர், கடந்த ஆண்டு முழுவதும் ஏழு முக்கிய பொது மருத்துவமனைகளுக்கு அருகிலுள்ள சந்திப்புகளுக்கும் இது படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது.
இதில் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை, கூ டெக் புவாட் மருத்துவமனை, சாங்கி பொது மருத்துவமனை, சிங்கப்பூர் பொது மருத்துவமனை, செங்காங் பொது மருத்துவமனை, டான் டோக் செங் மருத்துவமனை மற்றும் உட்லேண்ட்ஸ் மருத்துவமனை ஆகியவை அடங்கும்.
இந்த முன்னுரிமை அமைப்பு இதுவரை 2,500 முறைகளுக்கும் மேல் செயல்படுத்தப்பட்டுள்ளதாக குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது. அவசர மருத்துவ போக்குவரத்தின் போது, ஒரு ஆம்புலன்ஸ் பயணத்திற்கு சராசரியாக 1 நிமிடம் 57 விநாடிகள் வரை நேரம் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளுக்கு அருகிலுள்ள போக்குவரத்து சந்திப்புகளிலும், ஆம்புலன்ஸ்களுக்குள்ளும் சிறப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு ஆம்புலன்ஸ் சந்திப்பிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் வந்தவுடன், அதில் உள்ள துணை மருத்துவர்கள் உள் சாதனத்தின் மூலம் போக்குவரத்து விளக்குகளுக்கு சமிக்ஞை அனுப்ப முடியும். அதன் விளைவாக, சிக்னல் பச்சை நிறமாக மாறி, ஆம்புலன்ஸ் தடையின்றி முன்னேற வழிவகுக்கப்படுகிறது.
இதன் மூலம், மிகக் கடுமையான நிலையில் உள்ள நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு மேலும் சீராகவும், விரைவாகவும் கொண்டு செல்ல முடிகிறது. ஆம்புலன்ஸ் மறுமொழி திறனை தொடர்ந்து மேம்படுத்தும் நோக்கில், இந்த அமைப்பின் பயன்பாட்டை எதிர்காலத்தில் மேலும் விரிவுபடுத்த அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.