பள்ளி விடுமுறை எதிரொலி..!! பயணிகளுக்கு ICA விடுத்த எச்சரிக்கை..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஆண்டு இறுதி பள்ளி விடுமுறையின் முதல் வாரத்தில் உட்லேண்ட்ஸ் மற்றும் துவாஸ் தரைவழி சோதனைச் சாவடிகள் வழியாக 3.6 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளதாக குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது.
நவம்பர் 21ஆம் தேதி போக்குவரத்து உச்சத்தைத் தொட்டதாகவும், ஒரே நாளில் 5.55 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் எல்லையை கடந்ததாகவும் ICA குறிப்பிட்டுள்ளது. மலேசிய சோதனைச் சாவடிகளில் ஏற்பட்ட கடும் நெரிசல் காரணமாக, நாட்டை விட்டு வெளியேறும் ஓட்டுநர்கள் உச்ச நேரங்களில் மூன்று மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகள் நெருங்கி வரும் நிலையில், இரு தரைவழி சோதனைச் சாவடிகளிலும் போக்குவரத்து மேலும் அதிகரிக்கும் என ICA எச்சரித்துள்ளது. அதேசமயம், மின்-சிகரெட்டுகள் தொடர்பான அமலாக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், பயணிகளின் காத்திருப்பு நேரம் கூடும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பயணம் மேற்கொள்வதற்கு முன் தரைவழி சோதனைச் சாவடிகளில் நிலவும் போக்குவரத்து நிலைமைகளை முன்கூட்டியே சரிபார்க்குமாறும், நெரிசலைத் தவிர்க்க எல்லை தாண்டிய பேருந்துகளை பயன்படுத்துவதையும் பயணிகள் பரிசீலிக்க வேண்டும் என்றும் ICA அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அமலாக்க அதிகாரிகளுடன் பயணிகள் முழுமையாக ஒத்துழைக்கவும், போக்குவரத்து விதிகளை முறையாக கடைப்பிடிக்குமாறும் ICA வலியுறுத்தியுள்ளது. அறிவுறுத்தல்களை மீறுபவர்கள் அல்லது விதிமுறைகளை மீறுவோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.