சிங்கப்பூரில் காகங்களை விரட்டும் நடவடிக்கை தொடக்கம்..!! எதற்காக..??
சிங்கப்பூரில் தற்போது காகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புகார் வந்துள்ளதை அடுத்து தேசிய பூங்கா கழகமானது நேற்று முன்தினம் (மார்ச் 24) காகங்களை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது.
துப்பாக்கியால் காகங்களை சுடும் நடவடிக்கை யிஷூனில் நேற்று முன் தினம் (மார்ச் 24) தொடங்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில் இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்ட நிலையில் கடந்த சில ஆண்டுகளில் காகங்கள் தொடர்புடைய புகார்கள் மூன்று மடங்கு அதிகரித்துள்ள காரணத்தினால் தற்போது துப்பாக்கியால் சுடும் நிலைமை தொடங்கப்பட்டுள்ளதாக தேசிய வளர்ச்சி துறை அமைச்சர் சீ ஹொங் டாட் நேற்று முன் தினம் (மார்ச் 24) தமது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
அடுத்து வரும் வாரங்களில் ஜூரோங், பொங்கோல், பீஷான் உள்ளிட்ட ஒன்பது வட்டாரங்களில் படிப்படியாக காகங்களை விரட்டும் பணியானது மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்.
காகங்களை பிடித்தல், அவற்றின் இனப்பெருக்கத்தை தடுக்கும் வகையில் அதன் கூடுகளை அகற்றுதல் மற்றும் காகங்களை சுடுவதுடன் போன்ற மற்ற முறைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஆண்டில்(2025) காகம் தொடர்பாக ஏறக்குறைய 15,000 புகார்களை நகராண்மை சேவைகள் அலுவலகம் பெற்றுள்ளது. இது 2020 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது மூன்று மடங்கு அதிகம் என்று குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சுடும் இடங்களில் தடுப்புகளும் எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது.
துணை காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். காகங்கள் உள்ளூர் பறவையினம் அல்ல எனவும், அவை நகர்ப்புற சூழலுக்கு ஏற்ப மாறி பல்லுயிரியல் சூழலுக்கு அச்சுறுத்தல் ஆக இருப்பதாகவும் தேசிய பூங்கா கழகம் தெரிவித்திருக்கிறது.
காகங்களுக்கு பொதுமக்கள் உணவு அளிப்பதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் கூறியுள்ளார்.