சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய வாகன விபத்து..!! 14 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!
சிங்கப்பூர்: தீவு விரைவுச் சாலையில் பல வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. 2 கார்கள், 2 லாரிகள், 1 டிப்பர் லாரி ஆகிய வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் 14 பேர் காயம் அடைந்த சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மே 30ஆம் தேதியன்று துவாஸை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச் சாலையில் ஜூரோங் டவுன்ஹால் சாலை வெளியே இந்த கோர விபத்து நடந்துள்ளது.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள் 23 வயதிற்கும் 54 வயதிற்கும் உட்பட்டவர்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
6 பேர் தேசிய பல்கலைக்கழகம மருத்துவமனைக்கும், 8 பேர் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டதாக SCDF கூறியுள்ளது. மேலும் 5 பேர் மருத்துவமனைக்கு செல்ல மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு சென்ற போது ஓட்டுநர் இருக்கையில் சிக்கி இருந்த ஒருவரை குடிமை தற்காப்புப் படையினர் ஹைட்ராலிக் மீட்பு கருவிகளைப் பயன்படுத்தி மீட்டதாக தெரிவித்துள்ளனர்.
3 தடங்களைக் கொண்ட விரைவுச் சாலையின் நடுவே டிப்பர் லாரி ஒன்று அபாய விளக்குகள் ஒளிர விடப்பட்ட நிலையில் இருப்பதை Instagram காணொளி ஒன்றில் காண முடிகிறது.
லாரிக்கு முன்னால் சிவப்பு நிற கார் ஒன்றின் பின் பகுதி நொறுங்கிய நிலையில் அதில் காணப்படுகிறது. மேலும் ஒன்றோடு ஒன்று மோதி கொண்ட 2 லாரிகள் சற்று தள்ளி நிற்பதும் அந்த காணொளியில் தெரிகிறது.
இந்த விபத்து குறித்த விசாரணையை காவல்துறை தொடர்ந்து நடத்தி வருகிறது. டிப்பர் லாரியின் 39 வயதான ஓட்டுநர் ஒருவர் இந்த விபத்து குறித்த விசாரணைகளுக்கு உதவி வருவதாக காவல்துறை கூறியுள்ளது.