சட்டவிரோத சூதாட்ட வலையில் சிக்கிய 11 பேர்..!! சிங்கப்பூர் காவல்துறை தீவிர விசாரணை..!!
சிங்கப்பூரில் சட்டவிரோத இணையவழி சூதாட்டம் மற்றும் வங்கி கணக்குகளை தவறாகப் பயன்படுத்தியது என கூறப்படும் குற்றசாட்டின் பேரில் 9 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் மீது காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் 17 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று காவல்துறை உறுதி செய்துள்ளது.
ஜூன் 4-ஆம் தேதி முதல் 11 வரை சூதாட்டத்திற்கு எதிரான அமலாக்க நடவடிக்கையை சிங்கப்பூர் காவல்துறையினர் மேற்கொண்டனர். அதில் சிக்கிய 11 பேர் குறித்து விசாரணையைத் தொடங்கியதாக காவல்துறை நேற்று (ஜூன் 11) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
அவர்களில் 3 பெயர் சட்டவிரோத இணைய சூதாட்ட நடவடிக்கைகளில் பங்கேற்பதற்காக உரிமம் பெறாத சூதாட்ட தளங்களிலிருந்து இணைய சூதாட்டம் கணக்குகளைப் பெற்றதாக கூறப்படுகிறது.
சூதாட்ட கட்டுப்பாட்டு சட்டம், கணினி முறைகேடு சட்டம், தண்டனைச் சட்டம் மற்றும் ஊழல் போதைப் பொருள் கடத்தல் மற்றும் கடும் குற்றங்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வரும் குற்றங்களுக்காக 11 பேர் தற்போது காவல்துறையின் விசாரணையில் உள்ளனர்.
உலகக்கோப்பை போன்ற முக்கிய சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளின் போது, இது போன்ற சட்டவிரோத பந்தயம் உள்ளிட்ட சூதாட்ட நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக காவல்துறை சுட்டிக்காட்டி உள்ளது.
சூதாட்டத்திற்கு அடிமையானவர்கள் அல்லது தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக உதவி செய்ய விரும்பும் பொதுமக்கள், உதவிக்காக சூதாட்ட தடுப்புக்கான தேசிய மன்றத்தின் உதவி எண்ணான 1800-6-668-668 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று காவல்துறை கூறியுள்ளது.
மேலும் சட்டவிரோத சூதாட்ட இணையதளங்கள் அல்லது அது தொடர்பான விளம்பரங்களைக் கண்டறியும் பொதுமக்கள் 1800-255-0000 என்ற காவல் துறை எண்ணையோ அல்லது www.police.gov.sg/i-witness என்ற காவல்துறையின் இணையதளம் மூலமாகவும் உங்களது புகார்களை வழங்கலாம் என காவல்துறை பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.