NLB-யின் புதிய முயற்சியில் என்ன ஸ்பெஷல் தெரியுமா..?
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தேசிய நூலக வாரியம் (NLB), உள்ளூர் ஷாப்பிங் மால்கள் மற்றும் சமூக அமைப்புகளுடன் இணைந்து, வாசிப்பை ஊக்குவிக்கும் புதிய முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துப் படிக்க ஏற்ற வகையில், ஏழு பொது இடங்களில் 3,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.
“புக்கிஷ் ரிட்ரீட்” எனப்படும் இந்த சுய சேவை வாசிப்பு நிலையம், முதலில் ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் போனா விஸ்டாவில் உள்ள The Star Vista-வில் தொடங்க திட்டமிடப்பட்டது. படிப்படியாக இந்த திட்டம் பிற இடங்களுக்கும் விரிவடைகிறது. இதுவரை 25,000க்கும் மேற்பட்ட மக்கள் இந்த வாசிப்பு தளங்களைப் பயன்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு தளத்திலும் சுமார் 400 புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் நான்கு மொழிகளில் புத்தகங்களும் மின்னணு வாசிப்பு வளங்களும் வழங்கப்படுவதால்,அனைத்து வயது வாசகர்களுக்கும் விருப்பத்திற்கான தலைப்புகள் கிடைக்கின்றன.
மேலும்,பழைய நூலக பொருட்களை மறுசுழற்சி செய்து வசதியான வாசிப்பு இடங்களையும் NLB உருவாக்கியுள்ளது. புத்தகங்களை கடன் முறையில் எடுக்கத் தேவையில்லை.பொதுமக்கள் நேரடியாக எடுத்துச் சென்று வாசிக்கலாம். ஆனால் பிறரும் பயன் பெறும் வகையில், வாசித்த பின் புத்தகங்களை மீண்டும் திருப்பித் தரும்படி NLB கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த புதிய முன்முயற்சியின் மூலம், நகரத்தின் நடுவிலும், சமூக தளங்களிலும், வாசிப்பு ஒரு எளிய மற்றும் அனைவருக்கும் அணுகக்கூடிய செயலாக மாறிவருகிறது.