சு பிங்காய் வழக்கில் அதிரடி திருப்பம்..!! லண்டன் போலீஸ் கைப்பற்றிய அரிய சொத்துக்கள்..!!
சிங்கப்பூர்: பிரிட்டிஷ் அதிகாரிகள், S$3 பில்லியன் மதிப்புள்ள பணமோசடி வழக்கில் தொடர்புடைய சிங்கப்பூர் வணிகர் சு பிங்காயின் ஒன்பது சொத்துக்கள், அரிய டைனோசர் புதைபடிவங்கள் மற்றும் சீன கலைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இங்கிலாந்தின் தேசிய குற்றவியல் நிறுவனம் (NCA) தெரிவித்ததாவது, குற்ற வருவாய் சட்டத்தின் கீழ் சு பிங்காய் மற்றும் அவரது “சு எம்பயர் லிமிடெட்” நிறுவனத்துடன் ஒரு தீர்வு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. அதன்படி, லண்டனில் அமைந்துள்ள ஒன்பது அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பல அரிய பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
அவற்றில் இரண்டு அல்லோசரஸ் மற்றும் ஒரு ஸ்டெகோசொரஸ் டைனோசர் புதைபடிவங்களும் அடங்குகின்றன. இந்த புதைபடிவங்கள் ஜுராசிக் காலத்தைச் சேர்ந்தவை.இவை சுமார் 150 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை. கடந்த ஆண்டு லண்டனில் உள்ள கிறிஸ்டியின் ஏலத்தில் அவை S$21.22 மில்லியனுக்கு விற்கப்பட்டன.
மேலும், 11 சீன கலைப்படைப்புகள் 2022 ஆம் ஆண்டு ஏலத்தில் சுமார் S$684,000க்கு விற்கப்பட்டன. நீதிமன்ற உத்தரவின்படி, மீட்கப்பட்ட சொத்துக்களை விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் நான்கில் ஒரு பங்கு சு பிங்காய் நியமித்த வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
சு பிங்காய், சிங்கப்பூரில் S$3 பில்லியன் பணமோசடி வழக்கில் தொடர்புடையவர்.2023 ஆகஸ்ட் 15 அன்று காவல்துறை பெரும் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டபோது, அவர் நாட்டை விட்டு வெளியேறினார்.பின்னர் அவர் திரும்பி வரவில்லை.
2024 அக்டோபர் 9 அன்று,அவர் மற்றும் அவரது மனைவி சேர்ந்து சுமார் S$316.6 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்களை ஒப்படைக்க ஒப்புக்கொண்டனர். இதில் S$8.36 மில்லியன் மதிப்புள்ள நான்கு சொகுசு கார்களும் அடங்கும்.அவருக்கு சிங்கப்பூருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.