விலங்கிற்குக் கூட பல் சிகிச்சையா..!!எப்படி நடந்தது தெரியுமா..? முழு விவரம் உள்ளே..!!
சிங்கப்பூர்: மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் பல் பிரச்சினைகள் ஏற்படும் போது சிகிச்சை அவசியம் என்பதை எடுத்துக்காட்டும் வகையில், வான்டாய் வனவிலங்கு பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மலாயன் புலியான செரிகின் புதன்கிழமை (20.08.25) பற்களின் வேர் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டது.
மேல் இடது கோரைப் பல் உடைந்ததால் சிகிச்சை தேவைப்பட்டதாகவும், புலியின் பராமரிப்பாளர் உடனடியாக பிரச்சினையை கவனித்து கால்நடை மருத்துவர்களிடம் தெரிவித்ததாகவும், வர்த்தகம் மற்றும் தொழில் மற்றும் தேசிய மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் டான் சீ ஹூய் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், மண்டாய் வனவிலங்கு மருத்துவக் குழுவின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது என்றும், இப்படிப்பட்ட பராமரிப்புகள் அழிந்து வரும் உயிரினங்களின் இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்கின்றன என்றும் குறிப்பிட்டார்.
வரலாற்றில் மலாயன் புலிகளின் சுவடு
மாண்டாய் விலங்கு பாதுகாப்புக் குழுவின் தகவலின்படி, 1820 களுக்கு முன்பு சிங்கப்பூர் (தெமாசெக்) பல மலாயன் புலிகளின் வாழ்விடமாக இருந்தது. ஆனால் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் காடுகள் தோட்டங்களாக மாற்றப்பட்டதால் புலிகளின் வாழ்விடம் அழிந்தது.
இதன் விளைவாக புலிகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே மோதல்கள் அதிகரித்தன. அப்போது, புலிகளை கொல்வோருக்கு வெகுமதி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதால், மலாயன் புலிகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து, 1870களில் மிகக் குறைந்த அளவிற்கு வந்தது.
சிங்கப்பூரில் காணப்பட்ட கடைசி மலாயன் புலி 1930 இல் சோவா சூ காங்கில் சுடப்பட்டது குறிப்பிடத்தக்கது.