சிங்கப்பூரின் தூதரகம் திறக்கப்படவுள்ள நகரம் எது தெரியுமா..??
சிங்கப்பூர்:சிங்கப்பூரானது அடுத்த ஆண்டு மெக்சிகோ நகரில் ஒரு தூதரகத்தை நிறுவவுள்ளது. இது ஸ்பானிஷ் மொழி பேசும் நாடுகளில் சிங்கப்பூரின் முதல் தூதரகமாகவும்,பிரேசிலுக்குப் பிறகு லத்தீன் அமெரிக்காவில் அதன் இரண்டாவது தூதரகமாகவும் இருக்கும்.
மெக்சிகோவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.அவர்,“இது மெக்சிகோவின் எதிர்காலத்தில் சிங்கப்பூர் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது,”என தெரிவித்தார்.
தூதரகத்தின் நிறுவல் மூலம் சிங்கப்பூர் மற்றும் மெக்சிகோ தலைவர்கள்,அதிகாரிகள், வணிக சமூகங்களுக்கிடையே நெருக்கமான உறவுகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு சிங்கப்பூர் மற்றும் மெக்சிகோவிற்கிடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதை ஒட்டி, இரு நாடுகளும் எதிர்கால ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இரண்டு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
ஒப்பந்தங்களில் ஒன்றின் கீழ், இரு நாடுகளும் மூன்றாம் நாடுகளில் கூட்டு வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்வதற்கான கட்டமைப்பை உருவாக்க உள்ளன. இதன் மூலம் நிதி, தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் மனிதவளத்தை ஒருங்கிணைத்து உள்ளூர் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை ஊக்குவிப்பது குறிக்கோளாகும்.
மற்றொரு ஒப்பந்தம் பவளப்பாறை மறுசீரமைப்பு மற்றும் நிலையான நீலப் பொருளாதாரம் தொடர்பானது. கடல் சூழல் அமைப்புகள் எதிர்கொள்ளும் அதிகரித்த சுற்றுச்சூழல் அழுத்தங்களை சமாளிக்க,இரு நாடுகளும் தங்களது நிபுணத்துவத்தையும் தொழில்நுட்பத்தையும் பகிர்ந்து கொள்ளும்.