டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் EU–Singapore ஒப்பந்தம்..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கிடையே கையெழுத்தான EU–Singapore Digital Trade Agreement (EUSDTA) நேற்று(01.02.26) முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.
டிஜிட்டல் வர்த்தகத்திற்கான உயர்தர விதிகளை அமைப்பதும், எல்லை தாண்டிய தரவுகள் பாதுகாப்பாக பரிமாறப்படுவதை உறுதி செய்வதும் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும் என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஈடுபடும் வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு அதிக தெளிவையும் சட்ட ரீதியான உறுதியையும் வழங்கும் என கூறப்பட்டுள்ளது.
இது குறிப்பாக, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கிடையிலான டிஜிட்டல் வர்த்தக நடவடிக்கைகள் மேலும் எளிதாகவும் பாதுகாப்பாகவும் நடைபெற இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.
மேலும், இந்த உடன்பாடு நுகர்வோர் நலனை மேம்படுத்துவதோடு, தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. திறந்த மற்றும் விதிகள் சார்ந்த டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என்ற இரு தரப்புகளின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டின் அடையாளமாக இந்த ஒப்பந்தம் விளங்குகிறது என அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக உறவுகளை மேற்பார்வையிடும் அமைச்சர் கிரேஸ் ஃபூ, இது சிங்கப்பூர் இதுவரை கையெழுத்திட்ட மிகப்பெரிய இருதரப்பு டிஜிட்டல் பொருளாதார ஒப்பந்தம் என தெரிவித்துள்ளார். வெளிப்படையான மற்றும் நியாயமான டிஜிட்டல் வர்த்தகத்தை ஊக்குவிப்பதன் மூலம், இந்த ஒப்பந்தம் இரு தரப்புகளுக்கிடையிலான டிஜிட்டல் இணைப்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
இந்த ஒப்பந்தத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி அமைச்சர் கிரேஸ் ஃபூ ஹையன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக மற்றும் பொருளாதார பாதுகாப்பு ஆணையர் மரோஸ் செஃப்கோவிச் ஆகியோர் சிங்கப்பூரில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.