சிங்கப்பூர் நூலகங்களில் இனி இலவச சார்ஜிங் இல்லை..!! NLB வெளியிட்ட திடீர் அறிவிப்பு..!!
சிங்கப்பூரில் உள்ள 13 பொது நூலகங்களில் மொபைல் ஃபோன்களுக்கான குயிக் சார்ஜ் (Qucick Charge) இலவச மின்னூட்டும் நிலையங்கள் வரும் ஜூலை 27 ஆம் தேதி முதல் மூடப்படும் என்ற தேசிய நூலக வாரியம் (NLB) அறிவித்துள்ளது.
பொதுமக்கள் தங்களது கைபேசி மற்றும் மின்னனு சாதனங்களை மின்னூட்டும் நிலையங்களில் தனியாக கவனிக்காமல் விட்டு செல்லும் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பழுதடைந்த சாதனங்கள் மற்றும் மல்டி அடாப்டர்களைப் (Multi-Adoptors) பயன்படுத்துவதால் சில மையங்களில் மிகையான மின்சாரப் பயன்பாடு ஏற்பட்டு மின்சுற்றுக் கோளாறுகளும் ஏற்படுவதாக NLB விளக்கம் அளித்துள்ளது.
சாதனங்களை நீண்ட நேரம் கவனிக்காமல் மின்னூட்டலில் வைப்பது மின் தீ விபத்துகளுக்கு வழி வகுக்கும் என்பதால் இந்த தற்காலிக நிலையங்களை அகற்றுமாறு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்துள்ளது.
இலவசம் மின்னூட்ட நிலையங்களுக்கு பதிலாக ஜூலை 27ஆம் தேதி முதல் நூலகங்களிலேயே சார்ஜ்ஸ்பாட் (ChargeSPOT) எனப்படும் மின் தேக்கிகளை வாடகைக்கு எடுக்கும் புதிய கட்டண சேவை முறை அறிமுகமாக உள்ளது.
இதில் முதல் 1 மணி நேரத்திற்கு $1.50 வசூலிக்கப்படும். ஒரு நாளைக்கான அதிகபட்ச வாடகை வரம்பு $10 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நூலகங்களின் இருக்கைகள் முன்பதிவு திட்டத்தின் (Seat Booking System) கீழ் உள்ள 1,800க்கும் மேற்பட்ட இருக்கைகளுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள இலவச மின்முனைகள் (Power Points) எப்போதும் போல தொடர்ந்து செயல்படும் என்று SPH Media தெரிவித்துள்ளது.