சிங்கப்பூரில் மாற்றுத்திறனாளி மாணவரின் சேர்க்கை ரத்து..!! கல்வி கட்டணத்தால் இப்படி ஒரு முடிவா..??
சிங்கப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சர்வதேசப் பள்ளியில் படித்து வந்த 14 வயது மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவரின் சேர்க்கை, பள்ளி நிர்வாகத்திற்கும் அவரது தாயாருக்கும் இடையே ஏற்பட்ட கட்டணப் பிரச்சனை காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் @iis.school.parent என்ற கணக்கின் மூலம் அந்த மாணவரின் தாய் வெளியிட்ட புகாரைத் தொடர்ந்து இந்த சம்பவமானது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சிறப்பு கற்றல் (Learning Support) ஆதரவு தேவைப்படும் அவரது மகன் கடந்த 6 ஆண்டுகளாக இதே பள்ளிகள் பயின்று, 6ஆம் வகுப்பு வரை நிறைவு செய்யும் நிலையை எட்டி இருந்தார்.
பள்ளி நிர்வாகம் வழக்கமாக இன்வாய்ஸ்களை அனுப்பி, அதற்கான தொகையை செலுத்த வெறும் 24 முதல் 48 மணி நேரம் மட்டுமே அவகாசம் தருவதாக அந்த தாய் குற்றம் சாட்டியுள்ளார்.
பணத்தை உடனடியாக செலுத்தாவிட்டால் குழந்தைக்கு வழங்கப்படும் கல்விச் சேவைகள் உடனடியாக நிறுத்தப்படும் என்று பள்ளி நிர்வாகம் தங்களுக்கு நெருக்கடி கொடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்கூட்டியே தங்களுக்கு கட்டண அறிவிப்பை முறையான கால அவகாசத்துடன் அனுப்ப வேண்டும் என்ற வாக்குவாதத்தின் விளைவாக, அவரது மகன் பள்ளியை விட்டு நீக்கப்பட்டுள்ளதாக தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
பள்ளி நிர்வாகம் இது குறித்து கூறியதாவது: தங்களுடைய கட்டணக் கொள்கைகள் மற்றும் அதற்கான காலக்கெடு ஆகியவை முன்கூட்டியே பெற்றோருக்கு தெளிவாக தெரிவிக்கப்பட்டிருக்கும். இந்த விவகாரத்தில் தாங்கள் தொடர்ந்து பெற்றோருடன் இணக்கமான தொடர்பில் இருக்க முயன்றதாக பள்ளி தரப்பு கூறியுள்ளது.
ஆனால் பெற்றோரின் சில நடவடிக்கைகள் மற்றும் அணுகுமுறைகள், பள்ளி நிர்வாகத்தால் தொடர்ந்து சமாளிக்க முடியாத ஒரு இக்கட்டான சூழலால் இந்த இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
தனியார் கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளி மற்றும் சிறப்பு தேவையுடைய மாணவர்களின் சேர்க்கை, பாதுகாப்பு மற்றும் நிர்வாக பொறுப்புக்கூறல் குறித்த விவாதங்களை இச்சம்பவம் மீண்டும் எழுப்பிவுள்ளது.