இந்தோனேஷியாவில் சிங்கப்பூரர் கைது..!! காரணம் என்ன..??
இந்தோனேசியத் தலைநகர் ஜகர்த்தாவில், கேபாட்(kpods) எனப்படும் போதைப் பொருள் கலந்த மின்சிகரெட்டுகளைத் தயாரித்த வீட்டில் அந்நாட்டு போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரும், சுங்கத்துறையினரும் நடத்திய அதிரடி சோதனையில் 34 வயது சிங்கப்பூரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 17, 202) அன்று வட ஜகார்த்தாவின் ஆடம்பர குடியிருப்புப் பகுதியில் இந்த சோதனையானது நடத்தப்பட்டது.
மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்டு, ஜகார்த்தா சுகர்னோ – ஹாட்டா விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 2200 கிராம் எட்டோமிடேட் மூலப்பொருள் குறித்த விசாரணையின் அடிப்படையில் இந்த வீடு கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வீட்டை மற்றொரு சிங்கப்பூரர் வாடகைக்கு எடுத்து கைது செய்யப்பட்ட நபரை தயாரிப்பு பணிக்காக பயன்படுத்தி உள்ளார் . அவருக்கு தினமும் 500 போதைப் பொருள் மின்சிகரெட் மாத்திரைகளை தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்ததாகவும், அவர் ஜூலை 13ஆம் தேதி அன்று இந்தோனேசியாவிற்குள் நுழைந்ததாகவும் கூறப்படுகிறது.
விற்பனைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான போதைப் பொருள் மின்சிகரெட் குப்பிகள் மற்றும் அவற்றை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்ட மினி ஆய்வக கருவிகள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த சர்வதேச போதைப் பொருள் கும்பல் குறித்து இந்தோனேஷிய காவல்துறை தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.