கோவையில் 7-ம் வகுப்பு மாணவன் படுகொலை..!! நண்பர்கள் செய்த கொடூரம்.!!
கோவை மாவட்டம் இருகூர் என்ற பகுதியில் 7-ம் வகுப்பு மாணவன் அவனது நண்பர்களால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவமானது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருகூர் பகுதியைச் சேர்ந்த பாரதிராஜாவின் 13 வயது மகன் குமணன் (உண்மை பெயர் அல்ல) ஆர்.ஜி.புதூர் என்ற அரசுப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான்.
கோடை விடுமுறை என்பதால் கடந்த 15ஆம் தேதி அன்று பிற்பகல் நேரத்தில் இருகூர் வாய்க்காலுக்கு தனது நண்பர்களுடன் மீன்பிடிக்கச் சென்றுள்ளான்.
அப்போது சிறுவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் கோபமடைந்த 2 சிறுவர்கள் அங்கு கிடந்த மதுப்பாட்டிலைக் கொண்டு அந்த சிறுவனின் தலையில் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இதனால் பலத்த காயமடைந்த அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். அதனைக் கண்டு பயந்த அந்த 2 சிறுவர்கள் தாங்கள் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று எண்ணி அங்கேயே ரகசியமாக குழிதோண்டி உடலைப் புதைத்து விட்டு தங்களது வீடுகளுக்கு திரும்பி வந்துள்ளனர்.
நீண்ட நேரமாாகியும் வீடு திரும்பாத காரணத்தினால் பெற்றோர்கள் மாணவனை தேடி விசாரித்துள்ளனர். அந்த இரண்டு சிறுவர்களிடம் கேட்டபோது அவன் யாரோ ஒருவருடன் தனியாக சென்றான் என்று மழுப்பியுள்ளனர்.
சிறுவர்களின் அந்த செயலால் சந்தேகம் அடைந்த பெற்றோர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சிறுவர்கள் தாங்கள் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர்.
அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மே 18ஆம் தேதி காலை சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினரும் வருவாய்த்துறையினரும் புதைக்கப்பட்ட மாணவர்களின் உடலைத்தோண்டி எடுத்து, உடற்கூறு ஆய்விற்காக கோவை ESI மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விளையாடச் சென்ற இடத்தில் மாணவன் சக நண்பர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். கைது செய்யப்பட்ட இரு சிறுவர்களிடமும் தீவிர விசாரணையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.