கென்யாவில் பள்ளி விடுதியில் தீ விபத்து.!!16 மாணவிகள் பலி..!!
கென்யாவில், நேற்று (மே 28) பள்ளி விடுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 16 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியிலிருந்து சுமார் 120 கி.மீ. தொலைவில் உள்ள நகுரு கவுண்டி யின் கில்கில் பகுதியில் ‘உடுமிஷி பெண்கள் பள்ளி’ இயங்கி வருகிறது. இது ஒரு அரசு உதவி பெறும் விடுதியுடன் கூடிய பள்ளியாகும். இந்த பள்ளியின் விடுதி அறையில் நள்ளிரவு சுமார் 200 மாணவிகள் உறங்கிக் கொண்டு இருந்தனர்.
அப்போது, அதிகாலை 3.30 மணி யளவில் எதிர்பாராதவிதமாக விடுதி கட்டிடத்தில் திடீரென தீப்பற்றிக் கொண்டது. சற்று நேரத்தில் தீவிடுதி முழுவதும் மளமளவென பரவி, கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
இதனால் தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்த மாணவிகள், புகை மூட்டத்திற்கு இடையே தப்பிக்க வழியறியாமல் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் ஓடினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் 16 மாணவிகள் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் உறுதி செய்யப் பட்டுள்ளது.
மேலும், படுகாயமடைந்த 73-க்கும் மேற்பட்ட மாணவிகள் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த சமயத்தில் ஏற்பட்ட பயம் மற்றும் பதற்றத்தால் பல மாணவிகள் இருட்டில் வெளியே ஓடி ஒளிந்துள்ளனர்.
அவர்களை கண்டறியும் பணியில் போலீசார் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தீவிபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. கென்யாவில் உள்ள பள்ளி விடுதிகளில் இதுபோன்ற விபத்துகள் தொடர்கதையாகி வருகின்றன.
போல் மத்திய கென்யாவில் உள்ள கடந்த 2024-ம் ஆண்டு இதே ஒருபள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் 21 மாணவர்கள் கருகி உயிரிழந்தனர். அரசு பள்ளிகளில் தீ விபத்துகளை எதிர்கொள்வதற்கான போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை என அந் நாட்டின் தணிக்கை அதிகாரி ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத் தக்கது.