துவாஸ் சோதனைச் சாவடியில் கோர விபத்து..!! போக்குவரத்து பாதிப்பு..!!
சிங்கப்பூருக்கு மலேசியாவுக்கும் இடையேயான 2வது இணைப்புச் சாலையில் மலேசியாவை நோக்கிச் செல்லும் துவாஸ் சோதனைச் சாவடிகயில் ஒரு பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தால் பயணிகளுக்கு அனுமதி வழங்கும் நேரங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது.
துவாஸ் சோதனைச் சாவடி வழியாக மலேசியாவுக்கு பயணிக்க திட்டமிடும் பயணிகள் தாமதங்களை சந்திக்க நேரிடும் என ICA நேற்று (ஜூன் 5) இரவு 9.35 மணியளவில் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது.
இதற்கிடையில் சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட பல புகைப்படங்களும் காணொளிகளும் இணையத்தில் பரவத் தொடங்கின.
துவாஸ் சோதனைச் சாவடி வெளியேறும் பாலத்தில் இருந்து சுமார் 0.6 கிலோமீட்டர் தொலைவில் இரவு 8:38 மணி அளவில் இந்த சாலை விபத்து நடந்திருக்கலாம் என்று சிங்கப்பூர் சேனல் என்ற முகநூல் பக்கம் பதிவிட்டிருந்தது.
இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்ததாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் கூறியுள்ளனர். உயிரிழந்த 2 நபர்கள் குறித்து எந்த ஒரு அடையாளங்களும் விபத்து குறித்த விபரங்களும் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.
ICA இரவு 10:48 மணி அளவில் மற்றொரு அறிவிப்பை முகநூலில் வெளியிட்டு இருந்தது. அதில் விபத்து நடந்த இடம் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், மலேசியாவை நோக்கிச் செல்லும் 2வது இணைப்புச் சாலையின் அனைத்து பாதைகளும் போக்குவரத்திற்காக மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும் தெரிவித்திருந்தது.