சிங்கப்பூரில் விலங்கு கடத்தல்.. 21 நாய்க்குட்டிகள் விற்பனை..!! மூவருக்கு சிறைத் தண்டனை..!

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக விலங்குகளை இறக்குமதி செய்து விற்பனை செய்ய முயன்றது மற்றும் கடத்தப்பட்ட விலங்குகளை வீட்டில் வைத்திருந்தது தொடர்பான வழக்குகளில் மூவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இத்தகைய குற்றங்களுக்கு கடுமையான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என தேசியப் பூங்காக் கழகம் (NParks) தெரிவித்துள்ளது.
28 வயதான Ng Siew Teng மற்றும் அவரது 34 வயது கணவர் Callurn Lim ஆகியோர் மலேசியாவிலிருந்து 5 நாய்க்குட்டிகளை சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் கொண்டு வர முயன்றபோது அதிகாரிகளிடம் சிக்கினர்.
குடிநுழைவு மற்றும் சோதனைச்சாவடிகள் ஆணையத்தின் (ICA) அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவர்கள் பிடிபட்டனர்.
பின்னர் NParks மேற்கொண்ட விசாரணையில், சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட நாய்க்குட்டிகளை அந்தத் தம்பதி தங்களது வீட்டில் வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும், Instagram மூலம் மொத்தம் 21 நாய்க்குட்டிகளை விற்பனை செய்து சுமார் S$21,000 லாபம் ஈட்டியதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.
இந்த வழக்கில் தம்பதி இருவரும் 5 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து இருவருக்கும் தலா 19 வாரங்கள் மற்றும் 3 நாட்கள் சிறைத்தண்டனையும், S$5,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும், உரிமம் பெறாத இடத்தில் விற்பனைக்காக விலங்குகளை அடைத்து வைத்த குற்றத்திற்காக சிங்கப்பூரில் இதுவரை விதிக்கப்பட்டுள்ள மிகக் கடுமையான தண்டனை இதுவாகும் என்று NParks தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, 33 வயதான சுந்தர பாண்டியன் (Sundra Pandian) என்பவரின் வீட்டில் 13 கடத்தப்பட்ட விலங்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த விலங்குகள் சிங்கப்பூரில் விற்பனை செய்வதற்காக தாய்லந்திலிருந்து மலேசியா வழியாக கடத்திக் கொண்டுவரப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.
சுந்தர பாண்டியன் இந்த வழக்கு தொடர்பாக ஒன்பது குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். அவருக்கு 24 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் விலங்குகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து விற்பனை செய்வது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோதமாக விலங்குகளை நாட்டுக்குள் கொண்டு வருவது மட்டுமின்றி, அவற்றை விற்பனை செய்வதற்காக வைத்திருப்பதும் கடுமையான சட்ட நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என்பதை இந்த வழக்குகள் தெளிவுபடுத்துகின்றன.
விலங்குகளின் நலன் மற்றும் பொதுச் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், சட்டவிரோத விலங்கு வர்த்தகத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow us on : click here
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
