திருச்சி விமான நிலையத்தில் நவீன ட்ரோன்கள் பறிமுதல்..!!
திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து கடத்திவரப்பட்ட 12 நவீன ட்ரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்திற்கு கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிகளவில் போதை பொருட்கள் மற்றும் தங்கம் கடத்தப்பட்டு வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
கோடை காலங்களுக்கு தற்போது விமான சேவைகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சிங்கப்பூர் மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் விமானங்களில் கடத்தப்பட்டு வரும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று (மே 22) சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ (IndiGo – 6E 1008) விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த 2 பயணிகள் கொண்டு வந்த உடைமைகளை தீவிரமாக சோதனையிட்டனர்.
இதில், அவர்கள் தடை செய்யப்பட்ட ட்ரோன்களை உடைமைகளில் மறைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள், 2 பேரிடமிருந்தும் 12 நவீன ட்ரோன்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் அந்த பயணிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரோமங்கள் தொடர்பாக சுங்கத்துறை பாதுகாப்பு சட்டம் 1962 – இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இச்சம்பவத்தால் விமான நிலையப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.