சிங்கப்பூர் விமானத்தில் திடீர் மருத்துவ அவசரநிலை..!! பாதியிலேயே திரும்பிய விமானம்..என்ன நடந்தது?

சிங்கப்பூர் விமானத்தில் திடீர் மருத்துவ அவசரநிலை..!! பாதியிலேயே திரும்பிய விமானம்..என்ன நடந்தது?

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்குப் புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், விமானத்தில் ஏற்பட்ட மருத்துவ அவசரநிலை காரணமாக மீண்டும் சிங்கப்பூருக்குத் திரும்பியது. இந்தச் சம்பவம் செப்டம்பர் 14ஆம் தேதி நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் SQ24 விமானம், சிங்கப்பூரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், விமானத்தில் மருத்துவ அவசரநிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, விமானம் பாதியிலேயே சிங்கப்பூருக்குத் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அளித்த தகவலின்படி, SQ24 விமானம் செப்டம்பர் 14ஆம் தேதி இரவு 9.11 மணிக்கு சிங்கப்பூருக்குத் திரும்பியது.
இந்த Airbus A350-900 விமானத்தில் 144 பயணிகளும் 17 விமானப் பணியாளர்களும் இருந்தனர்.

விமானம் தரையிறங்கிய பின்னர், அனைவரும் வழக்கம்போல் விமானத்திலிருந்து இறங்கினர். பயணிகளுக்குத் தேவையான உதவிகளையும், சிற்றுண்டிகளையும் விமான நிறுவனம் ஏற்பாடு செய்தது.

விமானத்தில் எரிபொருள் நிரப்பும் பணிகள் முடிந்த பின்னர், SQ24 விமானம் அதே இரவு 11:58 மணிக்கு மீண்டும் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டது.

விமானம் செப்டம்பர் 15ஆம் தேதி நியூயார்க் உள்ளூர் நேரப்படி காலை 9:38 மணிக்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
எனினும், மருத்துவ அவசரநிலை தொடர்பான கூடுதல் விவரங்களைப் பயணிகளின் தனியுரிமை மற்றும் ரகசியத்தன்மை காரணமாக வெளியிட முடியாது என நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளத்தில் வெளியான தகவல்களில், விமானத்தில் இருந்த மருத்துவர் ஒருவர் விமானப் பணியாளர்களின் கோரிக்கையின் பேரில் மருத்துவ உதவி வழங்கியதாகக் கூறப்பட்டது. மேலும், விமானி உடல்நலக் குறைவால் விமானம் திரும்பியதாகவும் சிலர் தெரிவித்திருந்தனர்.

ஆனால், மருத்துவ அவசரநிலை விமானியைச் சார்ந்ததா என்பதை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை. எனவே, உறுதிப்படுத்தப்படாத தகவல்களை வைத்து முடிவுக்கு வர வேண்டாம்.