S$76,000 செலுத்தியும் வீட்டு வேலை முடியவில்லை..!! சிங்கப்பூர் நிறுவனத்துக்கு எதிராக குவியும் புகார்கள்..!!

S$76,000 செலுத்தியும் வீட்டு வேலை முடியவில்லை..!! சிங்கப்பூர் நிறுவனத்துக்கு எதிராக குவியும் புகார்கள்..!!

சிங்கப்பூரில் Axion Design என்ற உள்துறை அலங்கார நிறுவனத்துக்கு எதிராக வாடிக்கையாளர்களிடமிருந்து பல புகார்கள் எழுந்துள்ள நிலையில், அந்த நிறுவனம் குறித்து காவல்துறை மற்றும் அரசு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.

சில வாடிக்கையாளர்கள், நிறுவனத்திடம் பணம் செலுத்திய போதிலும் தங்களது வீட்டின் உள்துறை அலங்காரப் பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை என்றும், வழங்கப்பட வேண்டிய பொருட்களும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

சிலர் நிறுவனத்திடம் செலுத்திய பல ஆயிரம் வெள்ளி தொகையையும் திரும்பப் பெற முடியாமல் இருப்பதாகக் கூறியுள்ளனர். மேலும், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து நிறுவனம் தங்களது தகவல்களுக்கு பதிலளிப்பதை நிறுத்தியதாகவும் சில வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது சுமார் 20 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டில் மட்டும் Axion Design நிறுவனத்துக்கு எதிராக சிறு கோரிக்கை நீதிமன்றத்தில் 17 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.அவற்றில் 14 வழக்குகளுக்கு ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கு பண இழப்பீடு வழங்க நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒரு வாடிக்கையாளர், 2025ஆம் ஆண்டு மே மாதம் முதல் நிறுவனத்துக்கு சுமார் S$29,000 செலுத்தியதாகவும், வடிவமைப்பு வரைபடங்கள் வழங்கப்படாததுடன், பணிகளில் பல்வேறு குறைபாடுகள் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மற்றொரு வாடிக்கையாளர் S$76,000 செலுத்தியிருந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பருக்குள் முடிக்கப்பட வேண்டிய பணிகள் இன்னும் நிறைவடையவில்லை எனக் கூறியுள்ளார்.
பணிகளைச் சரிசெய்ய வேறு நிறுவனத்தை அணுகியதால் கூடுதலாக S$20,000 செலவானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்களுடனான பிரச்சினைகளுக்கு அப்பால், நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களும் சம்பளம் வழங்கப்படாதது குறித்து புகார் அளித்துள்ளனர்.

நிறுவனம் ஊழியர்களுக்கான மத்திய சேமநிதி (CPF) பங்களிப்புகளையும் செலுத்தவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக CPF அமைப்பு சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. மனிதவள அமைச்சகமும் நிறுவனம் வேலைவாய்ப்பு சட்டத்தை மீறியுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

இதுவரை 5 ஊழியர்கள், நிலுவைத் தொகையைத் திருப்பிச் செலுத்துவது தொடர்பாக நிறுவனத்துடன் உடன்பாடு செய்துள்ளனர்.

Axion Design நிறுவனத்தின் இணை நிறுவனர் John Tan, நிறுவனம் ஏற்கனவே திவாலாகிவிட்டதாகவும், முடிக்கப்படாத பணிகளை நிறைவு செய்யவும் வாடிக்கையாளர்களுக்குப் பணத்தைத் திருப்பிச் செலுத்தவும் போதிய நிதி மற்றும் ஊழியர்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பணப்புழக்கப் பிரச்சினை காரணமாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிறுவனம் தனது செயல்பாடுகளை நிறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், சுமார் 20 வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் பணம் செலுத்த வேண்டியுள்ளது என்றும், தற்போது அதனைச் செலுத்த போதிய நிதி நிறுவனத்திடம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.