சிங்கப்பூரின் பிரம்மாண்ட சாலை திட்டம் தாமதம்..!! LTA வெளியிட்ட புதிய தகவல்..!!

சிங்கப்பூரின் பிரம்மாண்ட சாலை திட்டம் தாமதம்..!! LTA வெளியிட்ட புதிய தகவல்..!!

சிங்கப்பூரின் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றான வடக்கு-தெற்கு Corridor (NSC) திறப்பு மேலும் 2 ஆண்டுகள் தாமதமாகியுள்ளது. இதன் முதல் கட்டம் 2029 முதல் படிப்படியாக திறக்கப்படும் என நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது.

முன்னதாக, NSC-யின் அட்மிரால்டி ரோடு வெஸ்ட் முதல் லென்டர் அவென்யூ வரையிலான உயர்மட்டப் பாலம் (viaduct) பகுதி 2027 முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்தப் பகுதி 2029 முதல் கட்டங்களாக திறக்கப்படும்.

அதேபோல், லென்டர் அவென்யூ முதல் ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே (ECP) வரையிலான சுரங்கப் பகுதி, முன்னதாக 2029 முதல் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 2031 முதல் படிப்படியாக திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணிகளின்போது எதிர்பார்த்ததை விட சிக்கலான நிலத்தடி நிலைமைகள் கண்டறியப்பட்டதே முக்கிய காரணம் என LTA தெரிவித்துள்ளது.

குறிப்பாக நொவேனா பகுதியில் NSC சுரங்கப்பாதை, வடக்கு-தெற்கு வழித்தட MRT சுரங்கப்பாதைகளுக்கு அருகிலும், சில இடங்களில் அவற்றின் மேலேயும் கீழேயும் அமைக்கப்படுகிறது.
அங்கு எதிர்பாராத வகையில் பிளவுபட்ட பாறைகள் மற்றும் நிலத்தடி நீர் உட்புகுதல் கண்டறியப்பட்டதால், கட்டுமான முறைகள் மாற்றப்பட்டுள்ளன. இதனால் பணிகள் அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றன.

தாம்சன் மற்றும் உட்லண்ட்ஸ் பகுதிகளிலும் எதிர்பார்த்ததை விட கடினமான பாறை அமைப்புகள் கண்டறியப்பட்டதாக LTA கூறியுள்ளது. சில இடங்களில் அதிக ஆழத்தில் அடித்தளப் பணிகள் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

NSC முழுமையாக திறக்க தாமதம் ஏற்பட்டாலும், கட்டுமானத்தால் பாதிக்கப்பட்ட சாலைகள் மற்றும் நடைபாதைகள் படிப்படியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் கொண்டு வரப்படும்.

2027 முதல்: முக்கியமான பணிகள் படிப்படியாக சுரங்கப் பகுதிகளுக்கு நகரும்.

2028 முதல்: சாலைகள் மற்றும் நடைபாதைகள் பகுதிகளாக மீண்டும் அமைக்கப்படும்; சில சத்தத்தடுப்புகளும் அகற்றப்படும்.

2029 முதல்: சைக்கிள் பாதைகள் மற்றும் pedestrian overhead bridges உள்ளிட்ட இணைப்பு வசதிகள் படிப்படியாக மேம்படுத்தப்படும்.

2031 முதல்: லென்டர் அவென்யூ முதல் ECP வரையிலான சுரங்கப் பகுதி கட்டங்களாக திறக்கப்படும்.

வடக்கு-தெற்கு வழித்தடம் சுமார் 20 கி.மீ.க்கும் அதிக நீளம் கொண்டது. இது சிங்கப்பூரின் வடக்குப் பகுதிகளை நகர மையத்துடன் இணைக்கும் வகையில் உருவாக்கப்படுகிறது.இந்தத் திட்டத்தில் சுமார் 8.8 கி.மீ. உயர்மட்ட viaduct பகுதியும், 12.3 கி.மீ. underground tunnel பகுதியும் இடம்பெற்றுள்ளன.

Sembawang, Yishun, Ang Mo Kio, Toa Payoh, Novena மற்றும் Rochor உள்ளிட்ட பகுதிகளின் இணைப்பை மேம்படுத்துவதுடன், சிங்கப்பூரின் வடக்கு–தெற்கு சாலைப் போக்குவரத்து நெரிசலை குறைப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும்.

LTA, கட்டுமான காலம் நீடிப்பதால் குடியிருப்பாளர்கள், வணிக நிறுவனங்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை புரிந்துகொள்வதாகவும், பணிகளை விரைவுபடுத்த தேவையான கூடுதல் பணியாளர்கள் மற்றும் உபகரணங்களை பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.