ஊழியர் மீது பேருந்தை ஏற்றிய ஓட்டுநர்..! சிங்கப்பூரில் 3 வாரம் சிறை தண்டனை!
சிங்கப்பூரின் ஆன்சன் சாலையில் கட்டுமான ஊழியர் ஒருவர் மீது பேருந்தை ஏற்றிய 50 வயது ஓட்டுநருக்கு 3 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் 5 ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முகம்மது ஹடி அப்துல்லா என்ற அந்த ஓட்டுநர், 2024ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி மாலை சுமார் 5.30 மணியளவில் தஞ்சோங் பகாரில் உள்ள பாமர் சாலையிலிருந்து ஆன்சன் சாலையை நோக்கி SMRT பேருந்தை ஓட்டிச் சென்றார்.
போக்குவரத்து விளக்கு பச்சை நிறத்தில் இருந்ததால், ஆன்சன் சாலையின் நான்காவது தடத்தில் பேருந்தை வலதுபுறமாகத் திருப்பினார்.
விபத்தை உணர்ந்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தி, காயமடைந்த ஊழியருக்கு உதவி செய்தார். பின்னர் அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
விபத்தில் ஊழியரின் வலது கணுக்காலில் முறிவு ஏற்பட்டதுடன், இடது முழங்காலிலும் கடுமையான காயம் ஏற்பட்டது.
கணுக்கால் முறிவுக்காக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பிய அவருக்கு மொத்தம் 86 நாட்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது.
உரிய கவனமின்றி வாகனம் ஓட்டி பலத்த காயத்தை ஏற்படுத்திய குற்றத்தை முகம்மது ஹடி அப்துல்லா ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து செப்டம்பர் 1ஆம் தேதி அவருக்கு 3 வாரச் சிறைத்தண்டனையும், 5 ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் உரிய கவனமின்றி வாகனம் ஓட்டி பலத்த காயத்தை ஏற்படுத்தும் குற்றத்திற்கு $5,000 வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இந்த சம்பவம், சாலையில் வாகனம் ஓட்டும்போது குறிப்பாக திருப்பங்களில் மற்ற சாலைப் பயனீட்டாளர்கள் மற்றும் பணியாளர்களைக் கவனமாகக் கண்காணிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நினைவூட்டுகிறது.