சிங்கப்பூரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து..!!குடியிருப்பாளர்களின் நிலை என்ன..??
சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 9) அதிகாலை சோவா சூ காங் வடக்கு சாலை 6, எண் 52 இல் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அதிகாலை 4:50 மணி அளவில், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைப்புக்கு (SCDF) விபத்து குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு SCDF வீரர்கள் விரைந்து வந்தனர்.
விபத்தில் ஏற்பட்ட புகையை சுவாசித்தக் காரணத்தால் 2 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டனர். பாதிக்கப்பட்ட நபர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்த பொழுது அவர்கள் மருத்துவமனைக்கு செல்ல மறுத்து விட்டனர்.
இந்த விபத்து குறித்த காணொளியானது இணையத்தில் பரவி வருகிறது. அந்த காணொளியில் யூ மே கிரீன் கட்டிடத்தின் 3-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து தீப்பிழம்புகள் எழுவதும், ஜன்னல்களில் தீப்பொரிகள் சிதறுவதும் காணப்படுகிறது.
படுக்கை அறையில் ஏற்பட்ட மின்சாரக் கோளாறே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது போன்ற தீ விபத்துக்களை தவிர்ப்பதற்கு, ஒரே மின் இணைப்பில் அதிக மின்சாதனங்களை இணைக்க வேண்டாம் எனவும், சாதனங்கள் பயன்பாட்டில் இல்லாத போது எப்பொழுதும் மின்சாரத்தை அணைத்து விட வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அறிவுறுத்தியுள்ளது.