5,400-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சோதனை… 247 வாகனங்கள் பறிமுதல்..!! சிங்கப்பூரில் LTA அதிரடி!

5,400-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சோதனை… 247 வாகனங்கள் பறிமுதல்..!! சிங்கப்பூரில் LTA அதிரடி!

சிங்கப்பூரில் இருந்து மலேசியாவுக்கு பயணிகளை அழைத்துச் செல்லும் சட்டவிரோத Cross-Border Ride-Hailing சேவைகளுக்கு எதிராக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளில், நிலச் சோதனைச் சாவடிகள், சாங்கி விமான நிலையம் மற்றும் உட்லண்ட்ஸ் பகுதிகளில் சட்டவிரோதமாக எல்லை தாண்டிய பயணிகள் போக்குவரத்து சேவையை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் மேலும் 6 ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது வாகனங்களும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

LTA வெளியிட்ட தகவலின்படி, இந்த நடவடிக்கைகள் National Private Hire Vehicles Association மற்றும் National Taxi Association ஆகிய அமைப்புகளிடமிருந்து கிடைக்கும் வழக்கமான புகார்களின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் உரிய உரிமம் மற்றும் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் ஓட்டுநர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக S$3,000 வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மேலும், சம்பந்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட வாய்ப்புள்ளது.

2025 ஜூலை முதல் LTA அதிகாரிகள் 5,400-க்கும் மேற்பட்ட வாகனங்களைச் சோதனை செய்துள்ளனர். அவற்றில் 247 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் 25 முதல் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே தற்போது மேலும் 6 ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக LTA தெரிவித்துள்ளது.

பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, உரிய உரிமம் பெற்ற Cross-Border சேவைகளை மட்டுமே பயன்படுத்துமாறு LTA அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக, Grab மூலம் முன்பதிவு செய்யப்படும் உரிமம் பெற்ற Cross-Border பயணிகள் சேவைகளை பயன்படுத்தலாம். அதேபோல், சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட உரிமம் பெற்ற Cross-Border டாக்ஸிகளையும் பயணிகள் பயன்படுத்தலாம்.

உரிமம் இல்லாத வாகனங்கள் மற்றும் ஓட்டுநர்களைப் பயன்படுத்தும் சேவைகளில், விபத்து போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் பயணிகளுக்கு போதிய காப்பீடு மற்றும் சட்டரீதியான பாதுகாப்பு கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என LTA முன்பே எச்சரித்துள்ளது.

மேலும், சட்டவிரோத Cross-Border பயணிகள் சேவை குறித்து பொதுமக்கள் ஆன்லைன் மூலம் அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம் என்றும் LTA தெரிவித்துள்ளது.