கெய்லாங் பகுதியில் 10 நாட்கள் தீவிர சோதனை..!! வெளியான பரபரப்பு தகவல்கள்..!!

சிங்கப்பூரின் கெய்லாங் பகுதியில் 10 நாட்கள் நடைபெற்ற பல்துறை அமலாக்க நடவடிக்கையில் 49 பேர் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 2ஆம் தேதி வரை நடைபெற்றது. பெடோக் காவல் பிரிவு தலைமையில் நடைபெற்ற இந்த சோதனை நடவடிக்கையில், குற்றப்புலனாய்வுத் துறை (CID), மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (CNB), சுகாதார அறிவியல் ஆணையம் (HSA), குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA), சிங்கப்பூர் சுங்கத்துறை, நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA), சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து செயல்பட்டன.
இந்த நடவடிக்கையில் 36 ஆண்கள் மற்றும் 13 பெண்கள் என மொத்தம் 49 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் வயது 16 முதல் 70 வரை இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத சூதாட்டம், பாலியல் தொழில், பதிவு செய்யப்படாத சுகாதாரப் பொருட்களின் சட்டவிரோத விற்பனை, போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் மற்றும் சட்டவிரோதமாக பொருட்கள் விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.
ஆகஸ்ட் 27 முதல் 29ஆம் தேதி வரை கெய்லாங் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், $54,000க்கும் அதிகமான மதிப்புள்ள இருமல் மருந்துகள், பாலியல் சக்தி அதிகரிப்பு பொருட்கள், மின்னணு சிகரெட்டுகள் மற்றும் எடோமைடேட் (Etomidate) கொண்ட vape குப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மின்னணு சிகரெட் தொடர்பான குற்றங்களுக்காக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், சட்டவிரோதமாக சுகாதாரப் பொருட்களை விற்பனை செய்ததாக அவர்கள் மீது விசாரணையும் நடைபெற்று வருகிறது.
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 2ஆம் தேதி வரை நடைபெற்ற நடவடிக்கையில், பாலியல் தொழில் மற்றும் கும்பல் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
இதில் 41 முதல் 53 வயதுக்குட்பட்ட மூன்று பெண்கள் பாலியல் தொழில் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
மேலும், செப்டம்பர் 1ஆம் தேதி மசாஜ் நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 30 முதல் 47 வயதுக்குட்பட்ட ஏழு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த 10 நாள் நடவடிக்கையின் போது சிங்கப்பூர் சுங்கத்துறையும் (LTA)சோதனைகளை மேற்கொண்டது.
இதில் 1,346 வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 18 பேருக்கு அபராத அறிவிப்புகள் வழங்கப்பட்டன.
LTA, சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட தனிநபர் போக்குவரத்து சாதனங்கள் மற்றும் மின்சார சைக்கிள்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்தது.
இதில் 13 பேர் விதிமீறலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. ஒரு தனிநபர் போக்குவரத்து சாதனம் மற்றும் எட்டு மின்சார உதவி சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெற்ற கூட்டு சோதனையில் கெய்லாங் பகுதியில் உள்ள 5 ஹோட்டல்கள் சோதனை செய்யப்பட்டன.
இந்த நடவடிக்கையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அரசு உத்தரவின்படி ஆஜராகாதது, போலி ஆவணங்கள் தயாரித்தது, திருட்டு மற்றும் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்தது உள்ளிட்ட குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செப்டம்பர் 10ஆம் தேதி சட்டவிரோதமாக பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பாக ஒருவரிடம் சிங்கப்பூர் உணவு நிறுவனம் விசாரணை நடத்தி, சில பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தது.
கெய்லாங் பகுதியில் நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக பல்வேறு அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், பொதுமக்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிந்தால் காவல்துறையிடம் தெரிவிக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Follow us on : click here
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
