சிங்கப்பூரில் புகைமூட்டம் ஏற்படும் அபாயம்..! இப்போதே தயாராகும் அதிகாரிகள்.. ஏன்?
சிங்கப்பூரில் புகைமூட்டம் ஏற்படும் சூழ்நிலையைச் சமாளிக்க முன்கூட்டியே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிலைமை மோசமடைந்தால் பொதுமக்களின் தேவைக்குப் போதுமான N95 முகக்கவசங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அதிகாரிகள் முக்கிய சில்லறை விற்பனைக் கடைகளிடம் முகக்கவசங்களின் இருப்பைக் கண்காணிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
அமைப்புகளுக்கு இடையிலான புகைமூட்டப் பணிக்குழு, நாட்டின் முக்கிய சில்லறை விற்பனைக் கடைகளுடன் இணைந்து முகக்கவசங்களின் கையிருப்பு நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தேவைக்கு ஏற்ப கூடுதல் முகக்கவசங்களை உடனடியாகக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளையும் செய்யுமாறு கடைகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி N95 முகக்கவசங்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் சூழல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முகக்கவசங்கள் வாங்குவதற்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் விதிக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
Watsons நிறுவனம், தங்களிடம் போதுமான அளவு முகக்கவசங்கள் இருப்பதாகவும், தொடர்ந்து கையிருப்பை உறுதி செய்வதற்காக விநியோகிப்பாளர்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
அதேபோல் Guardian மற்றும் FairPrice நிறுவனங்களும் புகைமூட்டம் தொடர்பான தேவையைச் சமாளிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளன. இதனுடன், அரசாங்கமும் முகக்கவசங்களின் கையிருப்பை வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகைமூட்ட நிலைமை மோசமடைந்து முகக்கவசங்களுக்கான தேவை அதிகரித்தால், கூடுதல் N95 முகக்கவசங்களைச் சந்தைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு பணிக்குழு சில்லறை விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பொதுமக்கள் தேவையான முகக்கவசங்களை இணையம் மூலமாகவும் எளிதாக வாங்கிக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், புகைமூட்டம் தொடர்பான நிலைமை தீவிரமடையும் பட்சத்தில் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய சிங்கப்பூர் முன்கூட்டியே தயாராகி வருகிறது.