சிங்கப்பூரில் சீன நாட்டவர் கைது...!! காரணம் என்ன..??
சிங்கப்பூரில் சுங்கத்துறையினர் கடந்த மாத (ஜூன்) இறுதியில் நடத்திய ஒரு அமலாக்க நடவடிக்கையில் 40 வயதான சீன நாட்டைச் சேர்ந்த நபரை கைது செய்துள்ளது. வரி செலுத்தப்படாத 1188 பாட்டில் மதுபானங்களை அந்த நபரிடம் இருந்து சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இதில் வரி ஏய்ப்பு செய்யப்பட்ட சுங்க மற்றும் கலால் வரியின் மொத்த தொகை சுமார் S$75,835 மதிப்புடையது என்பதை சுங்கத்துறை உறுதி செய்துள்ளது.
சுங்கத்துறை அதிகாரிகள் காகி புகிட் கிரசென்ட் பகுதியில் இந்த அமலாக்க நடவடிக்கை மேற்கொண்டனர். அங்கு சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட ஒரு லாரியிலிருந்து கறுப்பு நிற அட்டைப் பெட்டிகளை இறக்கி, அவற்றை ஒரு தள்ளுவண்டியில் ஏற்றி, பின்னர் ஒரு சுய சேமிப்புக் கிடங்கில் உள்ள சேமிப்பு அறைக்குக் கொண்டு செல்லும் ஒரு நபரைக் கண்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து, அமலாக்க அதிகாரிகள் அந்த லாரியில் 396 பாட்டில் வரி செலுத்தப்படாத மதுபானங்களையும், சேமிப்பு அறையில் மேலும் 792 பாட்டில்களையும் கண்டுபிடித்தனர்.
இதில் சம்பந்தப்பட்ட அந்த நபர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் வரி ஏய்ப்பு செய்யப்பட்ட அனைத்து மதுபானங்களும் சம்பந்தப்பட்ட லாரியும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட அந்த நபர் மீது கடந்த 24ஆம் தேதி அன்று நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கானது தற்போது விசாரணையில் உள்ளது.
சுங்கச் சட்டம் மற்றும் சரக்கு சேவை வரிசட்டத்தின் கீழ், வரி விதிக்கப்படாத மதுபானங்களை வாங்குவதோ, விற்பதோ, கொண்டு செல்வதோ, விநியோகிப்பதோ, சேமித்து வைப்பதோ அல்லது அப்புறப்படுத்துவதோ ஒரு கடுமையான குற்றமாகும்.
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு, ஏய்க்கப்பட்ட மொத்த சுங்க மற்றும் சேவை வரித் தொகையைப் போல் 20 மடங்கு வரை அபராதம் விதிக்கப்படும்.அல்லது 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.